அனுமதி மறுப்பு-அத்வானியின் நெல்லை கூட்டம் ரத்து
நெல்லை: அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து விட்டதால் நாளை நெல்லையில் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி பேசுவதாக இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் நாளை பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என பாஜ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பாளை ஜவஹர் மைதானம், வஉசி மைதானம், டவுன் பொருட்காட்சி மைதானம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் பொதுகூட்டம் நடத்த அனுமதி அளிக்க பாஜகவினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு பிரச்சனைக்காக பாளை ஜவஹர் மைதானத்தில் பொது கூட்டம் நடத்த அனுமதிக்க இயலாது என்று போலீசார் கை விரித்தனர். பாளை வஉசி மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொருட்காட்சி மைதானத்தில் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி பாஜ நிர்வாகிகள் கேட்டு கொண்டும், உரிய எழுத்து பூர்வ அனுமதியை மாநகராட்சி அளிக்கவில்லை. இதனால் அத்வானி பங்கேற்கும் பொது கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் பாளை வஉசி மைதானம், பொருட்காட்சி திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் போலிசாரும் மைதானத்தை ஆய்வு செய்தனர்.
நேற்று மாலை வரை பொதுகூட்டத்திற்கு மாநகராட்சி எழுத்துபூர்வ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அத்வானி பொதுகூட்டம் ரத்து செய்யப்படுவதாக நேற்றிரவு பாஜக ஆறிவித்தது.