தமிழகத்தில் தொடரும் கடும் வெயில்-லேசாக மழை
சென்னை: தமிழகத்தில் நேற்றும் கடும் வெயில் அடித்தது. இன்றும் வெயில் சற்றும் குறையவில்லை. இருப்பினும் ஆங்காங்கு லேசான மழை பெய்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி இன்றுடன் 3 நாட்களாகிறது. முதல் நாளிலிருந்தே வெயில் வெளுத்துக் கட்டி வருகிறது.
தொடர்ந்து வேலூரில்தான் கடும் வெயிலாக இருக்கிறது. நேற்று முன்தினம் 107 டிகிரி வெயில் அடித்தது. நேற்று 108 டிகிரி வெயில் அடித்தது. இன்றும் முற்பகல் 11 மணி நிலவரப்படி அங்கு 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
நேற்று பெரும்பாலான நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டிதான் வெயில் வெளுத்தது.
நெல்லையில் 106, திருச்சியில் 102, சென்னையி்ல 102, தஞ்சையில், 102, மதுரையில் 102, சேலத்தில் 100 என வெயில் கொளுத்தியது.
கோவையில் வெப்பநிலை 99 டிகிரியாகவும், கடலூரில் 97 டிகிரியாகவும் இருந்தது.
இன்று முற்பகல் நிலவரப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் காணப்பட்ட வெயிலின் அளவு...
வேலூர் - 100 டிகிரி பாரன்ஹீட்
சென்னை 100
மதுரை - 97
திருச்சி - 97
சேலம் - 97
அருப்புக்கோட்டை - 97
திண்டுக்கல் - 97
கோவை - 80
புதுச்சேரி - 89
சென்னை நகரில் வானம் சற்று மூடியே காணப்படுகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் கடும் வெயிலுக்கு மத்தியில் இதமான வானிலையும் காணப்படுகிறது.
இன்று மழை பெய்யலாம்...
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அக்னி வெயிலின் கடுமை அதிகமாக இருந்தாலும் வெப்ப சலனத்தின் காரணமாக நிலம் சார்ந்த நிகழ்வாக சில இடங்களில் கோடைமழை பெய்யலாம்.
அதன்படி, நேற்று தமிழகத்தின் உள்பகுதியிலும், கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.