ஆந்திர முதல்வர் ரெட்டியின் தந்தை கொலை - 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி
டெல்லி: ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டியைக் கொலை செய்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராஜசேகர ரெட்டியின் தந்தை ராஜா ரெட்டி. இவர் கடப்பா மாவட்டத்தில் வசித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு மே 23ம் தேதி ராஜா ரெட்டியை, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த உமா மகேஷ்வர ரெட்டி என்பவர் உள்ளிட்ட 13 பேரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இதற்குப் பழிக்குப் பழியாக ராஜசேகர ரெட்டியின் உறவினர்கள், உமா மகேஷ்வர ரெட்டியை வெட்டிக் கொன்றனர். இன்னொரு கொலையாளியும் வெட்டிக் கொல்லப்பட்டார்.
மீதமிருந்த 11 பேர் மீது கடப்பா கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ராஜசேகர ரெட்டி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2006ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 11 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச், 11 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.