நாமக்கல் தொழிற்சாலையில் தீ-13 தொழிலாளர்கள் பலி

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே வைகை எம்பியார் என்ற தவிட்டில் இருந்து சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் நடத்தி வரும் இந்தத் தொழிற்சாலையில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இலங்கை அகதிகள் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 100 பேர் இங்கு பணியாற்றி வந்தனர்.
நேற்று இரவு ஷிப்ட் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பிகாரை சேர்ந்த 14 பேரும், இலங்கை அகதிகள் 19 பேரும் பணியாற்றி கொண்டிருந்தனர்.
இந் நிலையில் இரவு 8.45 மணியளவில் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தவிட்டு மூட்டைகள் எரிந்தன. பின்னர் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதில் எல்லா தொழிலாளர்களும் தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் கிடைத்ததும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், வேகமாக காற்று வீசியதால் தீ பயங்கரமாகப் பரவியது. விடிய விடிய போராடி இன்று காலை 9 மணிக்குத் தான் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. ஆனாலும் இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.
இந்தத் தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 7 பேர் பலத்த தீக் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு தான் வேறு யாரும் இறந்தார்களா? அல்லது காயம் அடைந்தார்களா? என்பது தெரிய வரும்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் தவிட்டு மூட்டைகள் ஏற்றி வந்த ஒரு லாரியும் எரிந்து சாம்லாகிவிட்டது.












Click it and Unblock the Notifications