ராஜீவ் சிலை உடைப்பு-காங்கிரசார் சாலை மறியல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பேரூராட்சியின் பஜார் வீதியில் உள்ள 7 அடி உயர ராஜீவ்காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலையில் இந்த பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி ராஜீவ்காந்தி சிலையை யாரோ சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதை அறிந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆரணி-போளூர் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
மேலும், சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கும்படி போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.