சென்னை ஹூண்டாய் தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்!
சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தங்களது 4 நாள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் 18 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். நிர்வாகம் அதற்கு செவிசாய்க்காததால், கடந்த மே 4-ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் தமிழக தொழிலாளர் ஆணையர் அ சுகுமாரன் முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் தொழிற்சாலை நிர்வாகமும், தொழிலாளர் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடியுவின் அ. சவுந்திரராஜன் கூறுகையில், "தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென்றும், நிர்வாகம் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும் தொழிலாளர்களை நிபந்தனை ஏதுமின்றி அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. அதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டதால் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது" என்றார்.
இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புகின்றனர்.