தமிழகத்துக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டுகள்...!
சென்னை: நான் நலமுடன் இருக்கிறேன். 13ம் தேதி நடக்கும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மீண்டும் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெல்ல தொண்டர்கள் பம்பரமாக சுற்றிச் செயல்பட வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கலைஞர் நியூஸ் தொலைக்காட்சி மூலம் தொண்டர்களுக்கு உரையாற்றிய அவர்,
கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை மூலம் புத்துயிர் பெற்றேன். இப்போதும் புத்துயிர் பெற்றுள்ளேன். இப்போது நலமாகவே இருக்கிறேன்.
என் உடல் நலம் குறித்து புரளிகள் கிளப்பிவிடப்பட்டதும் நீ துடித்துப் போய் அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம், என் வீடு, தலைவர்களின் வீடுகள் முன் குவிந்ததும், நாடு முழுவதும் இருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதைபதைத்ததும் தெரியவந்தது.
தொண்டர்களாகிய உங்களை நேரில் சந்திக்க முடியாத வருத்தம் இருந்தாலும் தேர்தல் களத்தில் நீங்கள் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும்.
தேர்தல் நாள் நெருங்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று இந்த அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க மறக்காதே. நகரமோ, கிராமமோ ஒரு தெருவையும் விடாதீர்கள்.. ஒரு வீட்டையும் விடாதீர்கள்.
நாட்டையும் தமிழகத்தையும் காத்திட திமுகவுக்கு வாக்களிக்கக் கோருங்கள். இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க நான் எல்லா முயற்சிகளையும் எடுப்பேன். தனி ஈழத்தை உருவாக்குவது என் பொறுப்பு என்றார்.
தமிழகத்துக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டுகள்...
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடல்சார் பல்கலைக்கழகம் தங்கள் மாநிலத்தில் அமைத்திட மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக போராடினர்.
அக் கடல்சார் பல்கலைக்கழகத்தை, திமுகவைச் சேர்ந்த கப்பல், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டில் அமைத்திட நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தார்.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நாடாளுமன்ற ஓய்வு மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
இது தமிழக நலனுக்காக போராடுவோம் என்று வாய்கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் இல்லையா?
எனவே கம்யூனிஸ்டுகளை தோற்கடிக்க ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.