'3வது அணி- போஸ் கொடுக்கத்தான் லாயக்கு'!
சென்னை: 3வது அணி என்பது மூன்றாம் தரமான அணியாகும். இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கத்தான் பயன்படும். இந்த அணியால் ஒரு வெற்றியும் பெற முடியாது என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறுகையில், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி கூடுதல் இடங்களைப் பெறும். 180-க்கு மேற்பட்ட இடங்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.
அ.தி.மு.க. கூட்டணி இயற்கை கூட்டணி அல்ல. அது சந்தர்ப்பவாதத்தால் உருவான கூட்டணி. அதேபோல, 3-வது அணி என்பதே மூன்றாம் தர அணி தான். இது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு தான் பயன்படும். இது வெற்றி பெறாது. இதுவரை மூன்றாவது அணி அமைத்த ஆட்சிகளும் நிலையானதாக இருந்ததில்லை.
தனி ஈழம் அமைப்போம் என இப்போது கூறுகிறார் கருணாநிதி. இது தேர்தலை மனதில் கொண்டு கூறியுள்ளதாகும். சென்னைக்கு நாளை சோனியா காந்தி வருகிறார். அப்போது அவர் தமிழ் ஈழம் குறித்த தனது நிலையை கூறட்டும்.
இலங்கையில் முதலில் உடனடியாக போரை நிறுத்தி, மறுசீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும். தமிழர்களுக்கு அனைத்து நிலைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலை. இதற்கு அமைய இருக்கும் எங்கள் கூட்டணி அரசு பாடுபடும் என்றார் வெங்கையா.