விமானங்களில் பாதுகாப்பு குறைவு- ரூ.10 லட்சம் அபராதம்; 2 ஆண்டு சிறை!
டெல்லி: செலவைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, விமான சேவை நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதவிர இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த அபராதத்தொகை வெறும் ரூ.250 ஆகத்தான் இருந்தது. ஒரு மாத தண்டனை வழங்கப்பட்டு வந்தது.
அதைத்தான் இப்போது, அது ரூ.10 லட்சமாகவும் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகவும் உயர்த்தியுள்ளதற்குக் காரணம், பல தனியார் விமான நிறுவனங்கள், செலவுக் கட்டுப்பாடு எனும் பெயரில் பயணிகளின் பாதுகாப்பில் கோட்டை விடுவதுதான்.
இந்த புதிய தண்டனை முறையை உடனே அமல்படுத்துவதாக விமானப் போக்குவரத்து இயக்கக இயக்குநர் நஸிம் ஜைதி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் சிறிய விபத்து மற்றும் பாதுகாப்புக் குறைபாடு கூட இல்லாத வகையில் திறமையாக செயல்படும் விமான நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.