வைகோவை வீழ்த்த விருதுநகரில் பணம் விளையாடுகிறது-மதிமுக புகார்
விருதுநகர்: விருதுநகர் தொகுதியில் மதிமுக பொது செயலாளர் வைகோவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக மதிமுகவினர் புகார் செய்துள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செலாளர் வைகோ போட்டியிடுகின்றார். அவரை எதிரத்து காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாகூர் என்பவர் களத்தில் உள்ளார்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பணம் கொடுப்பதாக மதிமுகவினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர்.
அதில்,
திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஓட்டு போட பணம் கொடுக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் போனில் புகார் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அருப்புக்கோட்டையில் உள்ள 36 வார்டுகளிலும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பார்வையாளர் ராஜேந்திரகுமார், உதவி தேர்தல் அதிகாரியிடமும் புகார் தெரிவித்தோம். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சில இடங்களில் பணம் கொடுத்து வந்த திமுகவினர், மதிமுகவினரை கண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் எங்களது கட்சியை சேர்ந்த கணேசன் என்பவர் ரூ. 6 ஆயிரத்து 750, 45 பூத் சிலிப்பையும் கைப்பற்றியுள்ளார். பின்னர் நாங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தோம். அதன் பின்னரே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சாத்தூர் பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரிடம் ரூ. 59 ஆயிரத்து 250 போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் தேர்தல் விதி முறைகளை மீறி காங்கிரஸ் வேட்பாளர் செயல்பட்டு வருகிறார் என்பது தெரிகிறது.
தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நியாமான தேர்தலை நடத்த முன் வரவேண்டும். விருதுநகர் தொகுதிக்கு கூடுதல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.