கடலோர பாதுகாப்பு-அதிகாரிகளுடன் அந்தோணி ஆய்வு
டெல்லி: இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனோ மற்றவர்களோ இந்திய கடல் பகுதி வழியாக தப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கடற்படை அதிகாரிகளுட் ஆலோசனை நடத்தினார்.
இன்று நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆனால் பிரபாகரனோ அல்லது பிற விடுதலைப் புலிகளின் தளபதிகளோ இந்திய கடல் எல்லைக்குள் தப்பி வர முடியாது என்று இலங்கை கூறியுள்ளது. தனது கடல் பகுதியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இருந்தாலும், விடுதலைப் புலிகளின் திறமை குறித்து இலங்கையை விட இந்தியாவுக்கு நன்கு தெரியும் என்பதால், இலங்கையின் பேச்சை அப்படியே நம்பி விடாமல் இந்திய கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தென் கடலோரப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்தில் தென் பிராந்திய கடற்படை தலைமை கமாண்டிங் அதிகாரி டேம்ளே கூறுகையில், விடுதலைப் புலிகள் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளனர். எனவே அவர்கள் இந்திய கடற் பகுதி வழியாக தப்ப முயற்சிக்கலாம்.
குறிப்பாக இந்தியாவின் மேற்குக் கடற்பகுதியை அவர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அங்கு மர்மான முறையில் படகுகளின் நடமாட்டம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நான்கு அடுக்கு பாதுகாப்பை மேற்கொண்டிருப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது அவர்களது நாட்டு பாதுகாப்பை கருத்தில் கொண்டது. எனவே நமது கடற் பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியிருந்தார்.