புலிகள் மொத்தமாக தற்கொலை செய்வார்களாம்-ராணுவம் கூறுகிறது
கொழும்பு: ராணுவம் தனது இறுதி தாக்குதலை நிறைவு செய்யப் போவதால், மிச்சமுள்ள விடுதலைப் புலிகள் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வார்கள் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பு ஒன்று கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுதி நிமிடங்களை நெருங்கி விட்டது. தற்போது மிச்சம் உள்ள விடுதலைப் புலிகள் தங்களது தலைவர்களோடு மொத்தமாக தற்கொலை செய்து கொள்ளக் கூடும்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பிற மூத்த தலைவர்கள் இன்னும் போர்ப் பகுதியில்தான் இருக்கக் கூடும் என நம்புகிறோம். இருப்பினும் அதுகுறித்து உறுதியாக கூற முடியாது. அதேசமயம், கரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் அவர்கள் இருக்கலாம் என நினைக்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டது. இனியும் அவர்களால் எங்களுடன் போரிட முடியாத நிலையை உருவாக்கி விட்டோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜபக்சேவுக்கு 'ராஜ' வரவேற்பு!
இதற்கிடையே, ஜோர்டான் நாட்டில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த அதிபர் ராஜபக்சே இன்று காலை கொழும்பு திரும்பினார். அவருக்கு பட்டாசுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி பட்டாசுகள் வெடித்து சிங்களர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தனது ஜோர்டான் பயணத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான 25 ஆண்டு கால போரில் இலங்கை வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தார் ராஜபக்சே. இதையடுத்தே அவரது வருகையை அவரது கட்சியினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
இன்று காலை கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும், தரையிறங்கிய ராஜபக்சே, மண்ணை முத்தமிட்டார்.
இன்று மாலை அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். அப்போது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications