சில நொடிகளில் ரூ.4,08,410 கோடி மதிப்பு உயர்வு: முதலீட்டாளர் காட்டில் மழை!
மும்பை: இன்றைய பங்குச் சந்தை உயர்வு காரணமாக முதலீட்டாளர்களின் காட்டில் பணமழை கொட்டியது. வர்த்தகம் ஆரம்பித்த சில நொடிகளுக்குள் ரூ.4,08,410 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு உயர்ந்துவிட்டது.
இதனால் பங்குதாரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
பங்குச் சந்தை ஆரம்பத்தில் 1300 புள்ளிகள் உயர்ந்த போது ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டாளர் சொத்து மதிப்பு உயர்ந்தது. தற்காலிக நிறுத்தத்துக்குப் பிறகு சந்தை மீண்டும் துவங்கிய சில நிமிடங்களில் மேலும் 2 லட்சம் கோடிவரை உயர்ந்தது.
குறிப்பாக சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டுமே ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
"இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்க கடும்போட்டி நிலவியது. குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்கள் பெருமளவு ஆர்வம் காட்டியதால் பங்குகள் மதிப்பும் ஏகத்துக்கும் உயர்ந்துவிட்டது. இந்த நிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரும்' என்று ஆஷிகா பங்கு வர்த்தக மையம் தெரிவித்துள்ளது.