பிரபாகரன் மகன் ஆண்டனி-புலித்தேவன்-நடேசன் உள்பட 7 தலைவர்கள் சுட்டுக் கொலை

கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலையில், ராணுவத்தினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பதுங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது இரு வாகனங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்ல முயன்றனர்.
இதையடுத்து ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு வீரர்கள், 53வது பிரிவு வீரர்கள் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் அந்த வாகனங்களில் இருந்த அனைவருமே உயிரிழந்தனர்.
அவர்களில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன், சார்லஸ் அந்தோணியின் உதவியாளரான சுதர்மன், கரும்புலிகள் பிரிவு தலைவர் ரத்னம் மாஸ்டர், உளவுப் பிரிவு துணைத் தலைவர் கபில் அம்மான், காவல் பிரிவு தலைவர் இளங்கோ மற்றும் ரமேஷ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சார்லஸ் அந்தோணி, பிரபாகரனின் மூத்த மகன் ஆவார். புலிகள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வந்தார். விமானப்படைப் பிரிவான வான் புலிகள் பிரிவை உருவாக்கி அதை செயல்படுத்தி வந்தவர் சார்லஸ்தான்.
இலங்கை காவல்துறையில் காவலராக முன்பு பணியாற்றியவர் நடேசன். சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னர் நடேசன் அரசியல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பகுதி முழுவதும் ஏராளமான விடுதலைப் புலிகளின் உடல்கள் கிடப்பதாகவும், அவற்றை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை இணையதளம் தெரிவித்துள்ளது.
கபில் அம்மான், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளர் ஆவார். புதுக்குடியிருப்பை ராணுவம் கைப்பற்றியபோது நடந்த சண்டையில் கபில் அம்மான் படுகாயமடைந்தார். பின்னர் இரணைப்பாலை என்ற இடத்தில் கபில் அம்மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கபில் அம்மானின் ரகசிய வீட்டையும் அந்த சமயத்தில் ராணுவம் கண்டுபிடித்து கைப்பற்றியது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications