ரிசல்ட் சிடிக்களை மோசடியாக காப்பி செய்த கும்பல்!
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடங்கி சிடிக்களை, பத்திரிக்கையாளர்களிடமிருந்து மோசடியான முறையி்ல காப்பி செய்யும் கும்பலின் நடமாட்டம் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுகள் இயக்குநர் அலுவலக வளாகத்தில் (டிபிஐ) நடமாடியது. இவர்களிடம் சிக்கி சிலர் தங்களது சிடியில் உள்ள டேட்டாக்களைப் பறி கொடுத்துள்ளனர்.
இதுவரை பலவிதமான மோசடிகளைப் பார்த்துள்ளோம். ஆனால் டிபிஐ வளாகத்தில் இன்று நடந்த மோசடி பலேவிதம்.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அடங்கிய சிடியை பெற தமிழக அரசுக்கு பணம் கட்ட வேண்டும். அப்போதுதான் பத்திரிக்கைகளுக்கும், இணையதளங்களுக்கும் சிடி கொடுப்பார்கள்.
அதன்படி ரூ. 10,000 பணத்தைக் கட்டி ஒவ்வொரு பத்திரிக்கையும், இணையதளமும் இந்த சிடிக்களை வாங்கிச் சென்றனர்.
இப்படி சிடியுடன் வெளியே வரும் பத்திரிக்கையாளர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்களை இன்று காலை அணுகியது. சார், நானும் பிரஸ்தான். சிலர் சிடியில் டேட்டா சரியாக பதிவாகவில்லை என்று கூறினர். உங்க சிடி சரியா இருக்கான்னு செக் பண்ணிப் பாருங்க என்று கூறினர்.
இதை நம்பி பதறிப் போன அந்த பத்திரிக்கையாளர் அப்படியா என்று அலறவே, பயப்படாதீங்க எங்க கிட்ட லேப்டாப் இருக்கு. அதில் செக் பண்ணிப் பார்க்கலாம் என்று கூறி பத்திரிக்கையாளரிடமிருந்து சிடியை வாங்கி லேப்டாப்பில் சொருகுகின்றனர்.
பின்னர் அந்த சிடியிலிருந்து டேட்டாவை அப்படியே தங்களது லேப்டாப்பில் காப்பி செய்துள்ளனர். இதைப் பார்த்து என்னங்க காப்பி பண்றீங்க என்று கேட்கும் பத்திரிக்கையாளரிடம், இருங்க சார், முழுசா செக் பண்ணனுமில்ல என்று கூறி முழுமையாக டேட்டாவை கறந்து விட்டுத்தான் சிடியைக் கொடுத்துள்ளனர்.
காசு கொடுத்து கஷ்டப்பட்டு, அடித்துப் பிடித்து சிடியை வாங்கி விட்டு வந்த அந்த அப்பாவிப் பத்திரிக்கையாளர், இந்த மோசடிக் கும்பலால் டேட்டாவைப் பறி கொடுத்துள்ளார்.
இதேபோல மேலும் சிலரிடமும் இந்தக் கும்பல் கைவரிசையைக் காட்ட முயன்றுள்ளது. நமது செய்தியாளரிடமும் இக்கும்பல் திருட முயன்றது. ஆனால் நாம் உஷாராக இருக்கவே அந்தக் கும்பல் அகன்று விட்டது.
செய்தியாளர்கள் போல நடமாடி வரும் இந்தக் கும்பல், மோசடியாக திருடிய டேட்டாவை பெரும் பணம் கொடுத்து பிற இணையதளங்களுக்கு விற்பதாக தெரிகிறது.
அரசும், கல்வித்துறையும், காவல்துறையும் அடுத்த முறையாவது இந்தக் கும்பலை ஒழிக்க முயற்சி எடுத்தால் நலம்.