ஜூன் 3ல் திருச்சி மேயர் பதவிக்கு தேர்தல்!
திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு புதிய மேயர் பதவிக்கான தேர்தல் ஜூன் 3ம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான பால்சாமி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, சாருபாலா தொண்டமான் தனது மேயர் மற்றும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
துணை மேயராக உள்ள அன்பழகன் தான் தற்காலிக பொறுப்பு மேயராக செயல்பட்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் சாருபாலா தோற்றுவிட்ட நிலையி்ல் மேயர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடக்கிறது.
திருச்சி மாநகராட்சியில் 60 மொத்தம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில், திமுக 26, அதிமுக 10, காங்கிரஸ் 9, மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, தேமுதிக 1 வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்று கவுன்சிலராக உள்ளனர்.
பொது மக்கள் நேரடியாக மேயரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, திருச்சி மாநகராட்சியில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா மேயராகவும், திமுகவைச் சேர்ந்த அன்பழகன் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர்.
இந் நிலையில், திருச்சி மாநகராட்சியின் புதிய மேயர் பதவிக்கான தேர்தல் ஜூன் 3ம் தேதி காலை 9 மணிக்கு, மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள காமராஜ் மன்றம் ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பால்சாமி அறிவித்துள்ளார்.
இதில் மேயர் பதவி்க்கு காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். ஆனால், சாருபாலா மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.