பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?: எங்கே?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதி முக்கிய தலைவர்களில் ஒருவர்தான் பொட்டு அம்மான். உளவுப் பிரிவு தலைவராக இருந்து வந்தார்.
பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் பொட்டுதான் இருந்தார். பிரபாகரனின் இருப்பிடங்கள், செயல்பாடுகள் குறித்து அவரது மனைவிக்கு அடுத்தபடியாக பொட்டு அம்மனுக்குத்தான் தெரியும். அந்த அளவுக்கு மிக மிக முக்கிய இடத்தில் இருந்தார் பொட்டு அம்மான்.
மிகத் திறமையானவராக கருதப்படும் பொட்டு அம்மான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக முன்பு ராணுவம் கூறியது. ஆனால் பின்னர் ராணுவ தளபதி பொன்சேகா கூறுகையில், பொட்டு அம்மானின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றார்.
இதனால் பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று கருதப்படுகிறது. அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் எங்கு இருப்பார் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அவர் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம் என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் ராணுவத்தின் பிடியில் சிக்கக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை என்பதால் அதுவும் நம்பும்படியாக இல்லை.
பொட்டு அம்மன் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் உயிருடன்தான் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
பொட்டு அம்மான் இலங்கையிலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் சமீபத்தில் முடிந்த கடைசிக்கட்ட போரின்போது அவர் தப்பியிருக்க முடியாது. அதற்கு முன்பே அவர் தப்பிப் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய நடவடிக்கைகள் அனைத்திலும் பொட்டு அம்மானின் பங்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம், பிரேமதாசா கொலைச் சம்பவம், 1996ல் கொழும்பு வங்கி மீது நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 90 பேர் பலியான சம்பவம், அதையடுத்து கொழும்பு அருகே நடந்த பயணிகள் ரயில் மீதான தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய தாக்குதல்களில் பொட்டு அம்மானின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டத்தை பிரபாகரனும், பொட்டு அம்மானும் சேர்ந்துதான் தீட்டியதாக கருணா சமீபத்தில் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications