கடலூரில் அனைத்து கட்சிகளின் கொடிகள் எரிப்பு!
கடலூர்: கடலூர் அருகே திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த அனைத்து முக்கிய கட்சிகளி்ன் கொடிகளும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே வண்டிப்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் கோவில் தெரு மற்றும் கரையேறவிட்டகுப்பம் 32வது வார்டு பகுதிகளில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் என தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் கொடிக்கம்பங்கள் உள்ளது.
இந் நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் அனைத்து கட்சிக் கொடிகளையும் அறுத்து எறிந்து, தீ வைத்து கொளுத்தினர். பி்ன்னர் அந்த மர்ம நபர்கள் கொடிக் கம்பத்தின் கீழ் இருந்த கல்வெட்டுகளையும் அடித்து உடைத்து தப்பியோடினர்.
காலையில் அந்த பக்கம் வந்தவர்கள் இதை பாரத்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ அய்யப்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் சாண்டியின் உதவியுடன் அந்த இடத்தில் துப்பு துலக்கினர். தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications