ரவுடிகள்.. விபச்சார பெண்களுக்கு கராத்தே பயிற்சி
சென்னை: விபச்சாரத் தொழிலில் ஈடுபடும்போது ரவுடிகளால் ஏற்படும் தொல்லையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள விபச்சார அழகிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த திட்டம் செயலாக்கப்படுவது ஏதோ ஒரு வெளிநாட்டில் அல்ல..- நமது சிங்காரச் சென்னையில் தான்.
சென்னையில் கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பச் சூழல், வறுமை, கணவர்களால் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்பெண்கள் விபச்சாரப் படுகுழியில் விழுகின்றனர்.
புரோக்கர்கள் மூலம் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல நேரங்களில் புரோக்கர்கள் உரிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுவதும், ரவுடிகளால் தாக்கப்படும் சம்பவங்களிலும் விபச்சார அழகிகள் சிக்க நேரிடுகிறது.
இதுதவிர விபச்சாரப் பெண்களிடம் இன்பம் அனுபவித்து விட்டு அவர்கள் வைத்திருக்கும் பணம், போட்டிருக்கும் நகைகளை பறிக்கும் கும்பலும் நடமாடுகிறது. இப்படிப்பட்ட கும்பலிடம் சிக்கி சில நேரங்களில் விபச்சாரப் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதையடுத்து இப்படிப்பட்ட தொல்லைகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக விபச்சாரப் பெண்களுக்கு கராத்தே சொல்லித் தரும் திட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளனர்.
சென்னை, அண்ணா நகரில் உள்ள இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம் மற்றும் இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த கராத்தே பயிற்சி முகாமை நடத்துகின்றன.
சென்னையில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் 75 பெண்களுக்கு 3 பிரிவுகளாக கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 25 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருகிற 9ம் தேதி சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து சமுதாய நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் அரிகரன் கூறுகையில், சென்னையில் மட்டும் 6,300 பெண்கள் விபசார தொழிலில் ஈடுபட்டு வருவதாக கண்டறிந்துள்ளோம். இவர்களில் 75 பேருக்கு மட்டும்தான் கராத்தே பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களிடம் செல்லும் வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் பேசியபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றி விடுவர். இதனை கேட்கும் விபசார பெண்களை தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
மேலும் ஒருவருக்கு மட்டும் பேரம் பேசி விட்டு பலர் வந்து நிற்பார்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்கள் தாக்கப்படுகின்றனர், அல்லது பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.
ரவுடிகள் மற்றும் புரோக்கர்களாலும் தொல்லைகள் ஏற்படுகிறது என்று விபசார பெண்கள் கூறுகின்றனர்.
அப்படிப்பட்ட பெண்களுக்காகவே இந்த கராத்தே பயிற்சியை அளித்துள்ளோம். தாக்க வருபவர்கள் எழுந்திருக்க முடியாமல் முடங்கி கிடக்கும் வகையில் சில நுணுக்கங்களையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம் என்றார்.