பஸ் கட்டணத்தைக் குறைக்கக் கோரி ஜூன் 1ல் பாமக ஆர்ப்பாட்டம்
சென்னை: பஸ் கட்டணக் குறைப்பை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், வாக்குப்பதிவுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வரும் நகரப் பேருந்துகளில் பெருமளவில் கட்டண குறைப்பு செய்யப்பட்டது.
இரண்டு நாட்கள் அமலில் இருந்த அந்த கட்டண குறைப்பு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலையீட்டால், பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது, பாராளுமன்ற தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ற கட்டுப்பாடுகள் அகன்றுவிட்ட நிலையில் பேருந்து கட்டண குறைப்பை செயல்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
அண்மையில் நடைபெற்ற பா.ம.க. தலைமைப் பொதுக்குழு கூட்டத்தில் இதனைச் சுட்டிக்காட்டி, பேருந்து கட்டண குறைப்பை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், அன்றாடம் நகரப் பேருந்துகளைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் நலனை முன்னிட்டும் பேருந்து கட்டணக் குறைப்பை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
1-ந் தேதி காலை 10 மணியில் இருந்து பகல் 1 மணி வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பு காவல்துறையினரிடம் முறைப்படி முன் அனுமதி பெற்று நடத்தப்பட இருக்கும் பேரணியிலும், ஆர்ப்பாட்டத்திலும் பா.ம.க. தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications