சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பு - சுனாமி பீதி
சென்னை: சென்னையில் நேற்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால், சுனாமி பீதி ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற கடலோர பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கியது. கன்னியாகுமரியில் அளவுக்கு அதிகமாக கடல் சீற்றம் இருந்ததால், விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இது ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென சென்னையில் கடல் கொந்தளித்தது. ராட்சத அலைகள் எழுந்தன. நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த சூறைக் காற்று வீசியது.
மெரினா, நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடல் அலைகள், வேகமாக கரையை நோக்கி சீறிப்பாய்ந்து வருவதும், அதே வேகத்தில் கடலுக்குள் வேகமாக செல்வதுமாக இருந்தது.
இதனால், கரையில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளும், கட்டுமரங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில விநாடிகளில் மீண்டும் அதே வேகத்தில் கடற்கரையில் இருந்து வெகுதூரத்துக்கு கரைப்பகுதிக்கு அடித்துத் தள்ளப்பட்டன. இதனால் பல படகுகள் சேதமடைந்தன.
படகுகளை மீட்க முடியாத அளவுக்கு அலைகள் வேகமாக இருந்ததால் மீனவர்கள் திகைத்து நின்றனர்.
கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் சுனாமி வரப் போகிறது என்று கூறியபடி அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்தில் கடல் கொந்தளிப்பு நின்று விட்டது. கடல் வழக்கம் போல அமைதியாக காணப்பட்டது.
கடல் கொந்தளிப்பு காரணமாக, சென்னை மெரினா மற்றும் விவேகானந்தர் இல்லம் எதிரே கடல் நீர் குளம் போல் தேங்கியது.
திருவொற்றியூர் கடற்கரைப் பகுதியிலும் இதே போல் கடல் கொந்தளிப்பும், ராட்சத அலையும் சீறிப்பாய்ந்து வந்தது.
சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் அய்லா புயல் ஆகியவையும் இந்த கடல் கொந்தளிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரத்திலும்..
சென்னையைப் போலவே மாமல்லபுரத்திலும் கூட கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. கடற்கரை கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
10 அடி உயரத்துக்கும் மேலாக அலைகள் எழும்பின. அவை 70 மீட்டர் தூரத்துக்கு, கரையை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன. இதனால் கடல் நீர், கடற்கரை கோவிலுக்குள் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு ஓடினார்கள்.
கடற்கரை கோவிலுக்குள் கடல் நீர் புகுந்து இருப்பதால், கோவிலை சுற்றி குளம் போல தண்ணீர் தேங்கியது.
கோவிலுக்குள் மேலும் கடல்நீர் புகுந்து விடாமல் தடுக்க, கோவில் முன் மணல் மூட்டைகளை அடுக்கினார்கள். இதற்கான பணிகளை, தொல்பொருள் துறை அதிகாரி ஜெயகரன் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications