கர்நாடக பாஜகவில் பிரச்சனை-எதியூரப்பாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
பெல்லாரி: கர்நாடகத்தில் தங்களுக்கு துணை முதல்வர் பதவி அல்லது உள்துறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரி பாஜகவில் சக்தி வாய்ந்த குரூப்பாக செயல்படும் ரெட்டி சகோதரர்கள் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியுள்ளனர்.
அதே போல தனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரி மூத்த அமைச்சரான ஈஸ்வரப்பாவும் போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் கர்நாடக பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எதியூரப்பா தலைமையில் நடந்த பாஜக அரசின் ஓராண்டு வெற்றி விழாவை பெல்லாரியைச் சேர்ந்த அமைச்சர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி சகோதரர்ரளும், அவர்களது வலது கரமான அமைச்சர் ஸ்ரீராமலுவும் புறக்கணித்தனர்.
இத்தனைக்கும் கர்நாடகத்தில் பாஜக அரசு அமைவதற்கே காரணமாக இருந்தவர்கள் இந்த மூன்று சுரங்க அதிபர்களும் தான்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தங்களை எதியூரப்பா புறக்கணிப்பதாக குற்றச்சாட்டி வந்தனர். இந் நிலையில் அரசின் வெற்றி விழாவை புறக்கணித்தனர்.
இது குறித்து ரெட்டி சகோதரர்களின் அண்ணனும் பெல்லாரி தொகுதி பாஜக எம்எல்ஏவுமான சோமசேகர ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
எந்த ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போதும் எதியூரப்பா, எங்களது மாவட்ட மந்திரிகளின் கருத்தை கேட்பதில்லை. தன்னிச்சையாக அவர் முடிவை எடுக்கிறார். எதியூரப்பாவும் சில அமைச்சர்களும் எங்களை புறக்கணிக்கின்றனர். பெங்களூரில் நடந்த பாஜக வெற்றி விழாவக்கும் எங்களை அழைக்கவில்லை என்றார்.
இதையடுத்து ரெட்டி சகோதரர்களை சமாதானப்படுத்த தனது மூத்த செயலாளர்களில் ஒருவரை ஜனார்தன ரெட்டியை சந்திக்க எதியூரப்பா அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து வரும் 5ம் தேதி எதியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களும் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது தங்களுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அல்லது துணை முதல்வர் பதவியை ரெட்டிகள் கோருவது என்று தெரிகிறது.
பணம்-சாராயத்தால் வென்றோம்: அமைச்சர்
இந் நிலையில் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் எதியூரப்பாவின் மகன் போட்டியிட்ட ஷிமோகா தொகுதியில் பண பலத்தாலும் சாராயம் சப்ளை செய்தும் தான் வெற்றி பெற்றோம் என்று மூத்த பாஜக அமைச்சரான ஈஸ்வரப்பா குண்டைப் போட்டுள்ளார்.
எதியூரப்பா மீது அதிருப்தியில் உள்ள இவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார். இவரும் துணை முதல்வர் பதவியை கோருவதாகத் தெரிகிறது. இதைத் தர எதியூரப்பா மறுப்பதால் இந்தக் குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
ரெட்டி சகோதரர்களின் கட்டுப்பாட்டில் 20 எம்எல்ஏக்களும், ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவாக பி்ற்படுத்தப்பட்ட சமூக எம்எல்ஏக்களும் அணி வகுத்துள்ளதால் கர்நாடக பாஜக அரசு சிக்கலில் உள்ளது.












Click it and Unblock the Notifications