மக்களவைத் தேர்தலில் 'ஓ' போட்ட 18,162 பேர்!
சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளதாகவும் புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பிற மாநிலங்களில் ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த அனுமதி மறுக்கப்பட்டதற்குக் காரணமான நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 732 வாக்கு சாவடிகளில் வழக்கத்தை விட 15 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.
வாக்களிக்க விரும்பாத 18,162 பேர் 49 'ஓ' படிவத்தை பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டையில் தான் அதிகபட்சமாக 12,366 பேர் இந்த படிவத்தை பயன்படுத்தியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் படிவம் 6யை பயன்படுத்தி தங்கள் பெயர்களை சேர்க்கலாம்.
ரேஷன் கார்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் தான் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதனை ஒரு ஆவணமாக பயன்படுத்துவதை ஏற்க முடியவில்லை. அதனால் தான் புகைப்படத்துடன் கூடிய 13 மாற்று ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ரேஷன் கார்டுகளை ஒரு ஆவணமாக ஏற்க வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கோரவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தான் இது பற்றிய பிரச்சனைகள் வந்துள்ளன.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications