பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால் தற்கொலை செய்வேன் - சரத் யாதவ்
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றால் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் மிரட்டியுள்ளார்.
பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு பல முக்கிய கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த கட்சிகள்தான் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போதைய மசோதாவில் பல மாற்றங்களை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் அதை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், சில பெண்கள் மட்டும் சேர்ந்து கொண்டு இட ஒதுக்கீடு கோரினால் அதை ஏற்க முடியாது. அதற்குப் பதில் நாங்கள் நாடாளுமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் மீரா குமார் கருத்து தெரிவிக்கையில், இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சரத் யாதவ் மூத்த தலைவர். இதுகுறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை அரசு பார்க்கும் என்றார் அவர்.