Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புழல் சிறையில் பிரபல தாதா வெல்டிங் குமார் படுகொலை!

Subscribe to Oneindia Tamil

Welding Kumar
சென்னை:சென்னை புழல் சிறையில் ஏற்பட்ட திடீர் மோதலில் பிரபல ரவுடியும் ஆயுள் கைதியுமான வெல்டிங் குமார் (45) வெட்டிக் கொல்லப்பட்டார்.

சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட ததராறு மோதலாக முற்றியதே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆசியாவின் மிகப் பெரிய சிறையான புழல் சிறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அங்கு ஏற்பட்ட முதல் பெரிய மோதலாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

புழல் சிறையில் மொத்தம் 3500 கைதிகள் உள்ளனர். இவர்கள் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண் கைதிகள் என 3 பிரிவாக தடுக்கப்பட்டுள்ளனர்.

பிரபல ரவுடியும் இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்றவருமான வெல்டிங்க குமார் தண்டனைக் கைதிகள் பிரிவில்தான் அடைக்கப்பட்டிருந்தார்.

நேற்று பிற்பகல் சாப்பிட்டுவிட்டு தனது கூட்டாளி கைதிகள் இருவரோடு ஜெயிலில் சுற்றிக் கொண்டிருந்தார் வெல்டிங் குமார் .

பிற்பகல் 2.20 மணியளவில் வெல்டிங்குமார் வரும்போது எதிரில் அன்பு (35) என்ற மற்றொரு தண்டனை கைதி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.

அப்போது அன்பு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. உடனே வெல்டிங் குமாருடன் வந்தவர்கள், 'அண்ணன் வருகிறார், அவர் எதிரில் சிகரெட் பிடிக்கிறாயா' என்று அன்புவைக் கண்டித்துள்ளனர். பதிலுக்கு அன்பு, 'அண்ணன் என்ன பெரிய ஆளா? நான் அப்படிதான் சிகரெட் பிடிப்பேன்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதையொட்டி வெல்டிங்குமாரின் கூட்டாளிகள் இருவரும் அன்புவுடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஜட்டியில் மறைத்து வைத்திருந்த கத்தி...

அப்போது வெல்டிங் குமார், திடீரென்று தனது ஜட்டியில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து கையில் சுழற்றியபடி அன்புவை குத்தப் பாய்ந்தார். உடனே மற்ற கைதிகள் அவரை தடுத்து அழைத்துச் சென்றனர். பின்னர் இரு பிரிவினரும் கலைந்து சென்று விட்டனர்.

சற்று நேரம் கழித்து அன்பு தனது கூட்டாளி கைதிகளான ராஜா (35), கார்மேகம் (27) ஆகியோரை அழைத்துக்கொண்டு கையில் இரும்பு கம்பியோடு வந்தார். 'இப்போது வாடா பார்க்கலாம்' என்று வெல்டிங்குமாரிடம் அன்பு நேருக்கு நேர் மோதலில் ஈடுபட்டார்.

அவர்கள் கையில் இரும்பு கம்பியை பார்த்தவுடன் வெல்டிங் குமாருடன் இருந்த அவரது கூட்டாளிகள் இருவரும் நழுவிவிட்டனர்.

தனியாக மாடடிக் கொண்ட வெல்டிங் குமாரை அன்பு, கார்மேகம், ராஜா ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குத்தினார்கள். ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்தோடு அவர் கீழே சாய்ந்தார்.

இந்த சம்பவத்தால் சிறை வளாகத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் தெரிந்து சிறைக் கண்காணிப்பாளர் கனகராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் ஆகியோர் சிறை ஊழியர்களோடு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிறையின் டாக்டரும் வரவழைக்கப்பட்டார்.

உயிருக்கு போராடிய வெல்டிங்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அரசு மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கியபோது, வெல்டிங்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரிந்தது.

அவரது பிணம் அரசு பொது மருத்துவமனை பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது.

சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ், டி.ஐ.ஜி. துரைசாமி, மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ஆனி விஜயா, உதவி கமிஷனர் செல்வமூர்த்தி ஆகியோர் உடனடியாக புழல் சிறைக்கு விரைந்தனர்.

வெல்டிங்குமாரை கொலை செய்த கைதிகள் அன்பு, ராஜா, கார்மேகம் ஆகிய 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து பின்னர் பேட்டியளித்த டிஜிபி நட்ராஜ்,

கொலை செய்யப்பட்டுள்ள கைதி வெல்டிங்குமார் 12 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறார். அவருக்கும், அன்பு, கார்மேகம், ராஜா ஆகிய கைதிகளுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது.

முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் இறங்கி வெல்டிங் குமாரை தாக்கி இருக்கிறார்கள்.

அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார், என்றார்.

யார் இந்த வெல்டிங் குமார்?

ஒரு காலத்தில் சென்னையயே கலத்திய ரவுடி இந்த வெல்டிங்குமார். வெல்டிங் கடையில் வேலை பார்த்ததால் அவர் வெல்டிங் குமார் ஆகிவிட்டார்.

அரசியல்வாதிகளின் கூலிப்படை தலைவனாக திகழ்ந்தார். சென்னை கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், நாவலர் தெருவில் இவரது குடும்பம் வசிக்கிறது.

திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், ஏழுகிணறு ஆகிய போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன.

1985-ம் ஆண்டு திருவொற்றியூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு 1997-ம் ஆண்டு ஆயுள் தண்டனை கிடைத்தது. 1992-ம் ஆண்டில் ஏழுகிணறில் லம்பா மணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 1999-ம் ஆண்டு இன்னொரு ஆயுள் தண்டனையும் இவருக்கு விதிக்கப்பட்டது.

எஸ்பிளனேடு போலீசார் இவர் மீது பதிவு செய்த கொலை முயற்சி வழக்கில் இவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்தது. ராயபுரத்தில் நடந்த கொலை வழக்கில் இவர் சம்பந்தப்படுத்தப்பட்டு கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்தமாக இரட்டை ஆயுள் தண்டனையை இவர் அனுபவித்து வந்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி வழக்கு தொடர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும் வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கிலும் வெல்டிங்குமாருக்கு தொடர்புண்டு. இந்த வழக்குகளில் சி.பி.ஐ. கைது செய்து தண்டனை வாங்கித் தந்தது.

வாழ்நாளில் பெரும் பகுதியை சிறைப் பறவையாகவே கழித்துவிட்ட வெல்டிங்குமார் தனது நண்பர்களிடம் சிறையிலேயே எனது வாழ்க்கை முடிந்து விடும் என்று விளையாட்டாக சொல்வாராம். கொலை வழக்கில் சிறைக்குப் போன இவர், ஜெயிலுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு உள்ளார்.

திட்டமிட்ட சதியா?

வெல்டிங்குமாரை கொலை செய்த அன்பு, கார்மேகம், ராஜா ஆகிய 3 பேரும் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள். கார்மேகம், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர். அன்புவுக்கு மற்றொரு வழக்கில் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. ராஜா 3 ஆண்டு ஜெயில் தண்டனையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

புழல் ஜெயில் திறக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த மோதல்-கொலை சம்பவம் நடந்துள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஜெயிலர் மாற்றம்- உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்:

இதற்கிடையே, வெல்டிங் குமார் கொலையைத் தொடர்ந்து சிறை அதிகாரி (ஜெயிலர்) மற்றும் துணை ஜெயிலர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உதவி ஜெயிலர், சிறை வார்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர சிறைக் கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறை துறை டிஜிபி ஆர்.நடராஜன், டிஐஜி துரைசாமி, மாதவரம் போலீஸ் கமிஷனர் ஆனிவிஜயா மற்றும் போலீசார் புழல் சிறைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

இவர்களது விசாரணையைத் தொடர்ந்து புழல் சிறையின் உதவி ஜெயிலர் குமார், வார்டன் குணசேகரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

ஜெயிலர் அன்வர்பாஷா, துணை ஜெயிலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு கனகராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குமார் கொலை குறித்து டிஜிபி நடராஜ் கூறும்போது, சட்ட ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பிறகுதான் மேல் நடவடிக்கை பற்றி முடிவு செய்யப் படும் என்று தெரிவித்தார்.

உடல் ஒப்படைப்பு

இதனிடையே கொலை செய்யப்பட்ட வெல்டிங் குமார் உடல் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை வாங்கி செல்ல ஏராளமான உறவினர்கள் காத்திருந்தனர்.

வெல்டிங்குமார் வீடு உள்ள கொருக்குப்பேட்டை பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இறுதி சடங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது.

செல்போன்தான் காரணம்..

புழல் சிறையில் செல்போன்கள் புழக்கம் சர்வ சாதாரணமாக இருப்பதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது. இங்கு மட்டுமல்லாமல் அனைத்து சிறைகளிலும் செல்போன் நடமாட்டம் சாதாரணமாக உள்ளது.

புழல் சிறையில் நேற்று முன்தினம் ஒரு கைதியிடம் செல்போன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கட்டிடத்தின் மீது ஏறிக் கொண்டு குதித்து விடுவதாக மிரட்டினார். அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

இந்த செல்போன் குறித்து யார் தகவல் கொடுத்தது என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல்தான் கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது.

செல்போன் மட்டுமல்லாமல், கஞ்சா, சிகரெட், பீடி உள்ளிட்டவையும், கத்தி, கம்பு உள்ளிட்டவையும் சர்வசாதாரணமாக புழங்குகின்றன.

கைது செய்யப்பட்ட கைதிகள், தாதாக்கள் உள்ளுக்குள்ளேயே கோஷ்டிகளை அமைத்துக் கொண்டு அங்கும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதும் சாதாரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜான் பாண்டியன், முல்லைவேந்தனை கொல்ல முயன்றவர்..

வெல்டிங் குமார், சிறைக்குள்ளும் பெரும் தாதாவாக வலம் வந்தவர்.

முன்பு சேலம் சிறையில் இவரை அடைத்திருந்தபோது அங்கு அடைக்கப்பட்டுள்ள தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவரான ஜான் பாண்டியனைக் கொல்ல முயன்றதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தனையும் இவர் கொல்ல முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+