ஸ்வைன் ப்ளூ: 6 மாதத்தில் இந்திய தடுப்பூசி தயார்!
இதுகுறித்து சுகாதாரத் துறை இ ணைச் செயலாளர் வினீத் செளத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்னும் நான்கு அல்லது ஆறு மாதங்களில் இந்தியாவின் தடுப்பூசி தயாராகி விடும்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலும், இந்திய வைராலஜி கழகமும் ஏற்கனவே எச்1என்1 வைரஸை தனிமைப்படுத்தி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. இரு அமைப்புகளும் கூட்டாக வாக்சீன் கண்டுபிடிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் இந்த வைரஸின் மூல மாதிரியை அனுப்புமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கும் ஒரு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வாக்சீன் உருவாக்கம் தொடர்பாக மூன்று நிறுவனங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், பனசீயா பயோடெக் ஆகியவையே அவை.
அடுத்த நான்கு முதல் 6 மாதங்களுக்குள் வாக்சீன் கண்டுபிடிக்கப்படுவது உறுதி என்றார் அவர்.
பெங்களூரில் மேலும் இருவருக்கு ஸ்வைன் அறிகுறி..
இதற்கிடையே, பெங்களூரைச் சேர்ந்த 29 வயதுப் பெண் மற்றும் அவரது 3 வயது மகள் ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை நியூஜெர்சியிலிருந்து பெங்களூர் வந்தனர்.
அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில், அவர்களுக்கு எச்1என்1 வைரஸ் பாதிப்பு இருப்பது சனிக்கிழமை இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பெங்களூர் ராஜீவ் காந்தி நெஞ்சக நோய்களுக்கான மருத்துவமதனை இயக்குநர் பக்கி கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்தில் ஒருவர் பலி...
தற்போது உலகம் முழுவதும் 74 நாடுகளில் சுமார் 29 ஆயிரத்து 699 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயின் தாக்குதலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மெக்சிகோ, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகள் தான். இதுவரை இங்கு சுமார் 144 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதன் முறை வட அமெரிக்க கண்டத்தை தாண்டி வேறு பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் பிரிட்டனை சேர்ந்தவர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தை சேர்ந்த 38 வயதான அந்த பெண்மணிக்கு சமீபத்தில் தான் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவர் ஸ்வைன் ப்ளூ காரணமாக தான் இறந்துள்ளார் என்பதை பிரிட்டன் உறுதி செய்துள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 1,226 பேருக்கு ஸ்வைன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் மொத்தம் 12...
அதேபோல் நியூ ஜெர்சியில் இருந்து விமானம் மூலம் கடந்த 12ம் தேதி ஹைதராபாத் வந்து நான்கு பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்ப்டடு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 8 வயது மற்றும் 4 வயதான இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் எரகடாவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த வாரம் ஸ்வைன் ப்ளு இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 2 வயது குழந்தையின் பாட்டி ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது ஸ்வைன் ப்ளூவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதோடு ஹைதராபாத்தில் மட்டும் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
நாசா சென்ற மாணவர்களுக்கு...
இவர்களை தொடர்ந்து அமெரிக்காவின் நாசாவுக்கு சென்று டெல்லி வந்திறங்கிய ஜலந்தரை சேர்ந்த 17 வயது மாணவனுக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் சென்ற 30 நண்பர்களுக்கு அறிகுறி தென்படுவதாகவும், அவர்களது ராத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இதையடுத்து தற்போது இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஹைதராபாத்தில் 12, டெல்லியில் 5, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் தலா 2 மற்றும் கோவா, சண்டிகரில் தலா ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது தெரிய வந்துள்ளது.