மன நலம் பாதித்தவர் தாக்கி 4 பேர் பரிதாப பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மேலச்செவல்புரி என்ற கிராமத்தில் மன நலம் பாதித்த ஒருவர் கட்டையால் சரமாரியாக தாக்கியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
பொன்னமராவதி அருகே உள்ளது மேலச்செவல்புரி. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா சேர்வை. இவரது மகன் மருதுபாண்டியன். 36 வயதாகும் இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இன்று காலை திடீரென கடும் கோபத்துடன் கட்டை ஒன்றை எடுத்து தெருவில் போனவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் மருதுபாண்டியன். இதில் சரோஜா, சுகுமாரி மற்றும் அழகி, பழனியப்பன் ஆகியோர் படுகாயமுற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களில் பழனியப்பனுக்கு வயது 72 ஆகிறது. சரோஜாவுக்கு 62, அழகுக்கு 58 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திடீர் பயங்கர சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி சரக ஐஜி மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி. உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர்.
மருது பாண்டியனை போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.