என்எல்சி:4 ஆயிரம் தொழிலாளர்கள் நிரந்தரம்-நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அடுத்த மாத முடிவுக்குள் சுமார் 4 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் இது செய்யப்படும் என நிறுவனத்தின் தலைவர் ஏஆர் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் துணை நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்படும். அதன்மூலம் வெளிநாடுகளில் இருக்கும் நிலக்கரி சுரங்கள் வாங்கப்படும். இதிலிருந்து கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்து கடலோர பகுதிகளில் அனு மின் நிலையம் துவக்கப்படும்.
இதை தவிர தூத்துக்குடி பகுதியில் காற்றாலை திட்டத்தையும், உத்தர்கண்டில் நீர் மின் திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்க இருக்கிறோம்.
நிறுவனத்தின் 2008-09ம் ஆண்டு வர்த்தகம் ரூ.3354.91 கோடியாகும். நிகர லாபம் ரூ. 821.09 கோடி. போனசாக ஒவ்வொரு பங்கிற்கும் ரூ. 2 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி இரண்டாம் சுரங்கத்தின் தற்போதைய உற்பத்தி அளவான ஆண்டுக்கு 105 லட்சம் டன் நிலக்கரி தயாரிக்கப்படுகிறது அது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 150 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.
நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தின் முதல் கட்ட விரிவாக்க திட்டம் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதத்திலும், இரண்டாவது கட்டம் முடிவுக்கு பின்னர் நவம்பர் மாதத்திலும் மின் உற்பத்தியைத் தொடங்கும்.
ஜெயங்கொண்டானில் நான்கு திட்டங்களிலும் உற்பத்தி தொடங்கிய பின்பு அடுத்த ஆண்டில் இந்நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி உற்பத்தி அளவு ஆண்டுக்கு 2.40 கோடி டன் என்ற அளவிலிருந்து 3.06 கோடியாக உயரும். அதேபோல ஒரு மணி நேரத்தில் 24.90 லட்சம் யூனிட் மின் உற்பத்தி திறன் 32.40 லட்சம் யூனிட்டாக அதிகரிக்கும்.
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் 1000 மெகாவாட் அனல் மின் நிலையம் 2012-13ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும். எதிர்காலத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டுக்கு 135 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் 1600 மெகா வாட் அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
நெய்வேலி முதல் அனல் மின் நிலையத்திற்கு மாற்றாக 500 மெகா வாட் திறன் கொண்ட தலா 2 யூனிட்டுகள், ஆண்டுக்கு 80 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் 3ம் சுரங்கம் மற்றும் 1000 மெகா வாட் திறன் கொண்ட 3ம் அனல் மின் நிலையம் உள்பட பல திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம்.
இந்நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ நல திட்டம், சம்பள உயர்வு, கூட்டுறவு சங்கம் அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். இந்த ஒப்பந்தத்தை மீறி இப்போது தொழிற்சங்கங்கள் பிரச்சினை செய்து வருகின்றன. இதனை பேசி தீர்ப்போம்.
ஜுலை மாத இறுதிக்குள் 4 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். அவர்களது தகுதி, பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஏற்கனவே 19 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர்.
பழுப்பு நிலக்கரிக்கு மாற்றாக பிற எரிபொருட்களை பயன்படுத்தி மின்சக்தி தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.