நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டி எச்ஐவி பாதித்த பெண்ணை அவமானப்படுத்திய டாக்டர்கள்
ஜாம்நகர் (குஜராத்): குஜராத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளியின் நெற்றியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர் என்று பேன்டேஜில் எழுதி நெற்றியில் ஒட்டி அவமரியாதை செய்துள்ளது அரசு மருத்துவமனை ஒன்று.
குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு எச்ஐவி தாக்குதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததால் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவாமல் இருக்க கருவை கலைத்து விடுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் சிசுவை கலைக்க ஜாம்நகரில் உள்ள குரு கோவீந்த் சிங் மருத்துவமனையில் சேர்ந்தார். அவரை மற்ற நோயாளிகள் அருகில் அனுமதிக்காமல் ஒதுக்கி வைத்துள்ளனர். பின்னர் நேற்று அந்த பெண்ணின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் அந்த பெண்ணின் நெற்றியில் எச்ஐவி நோயாளி என்ற ஒரு ஸ்டிக்கரை ஓட்டினர். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிணங்களுக்கு மட்டுமே இப்படி ஒட்டுவார்கள்.
நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் அவமானமடைந்த அந்தப் பெண் தொண்டு நிறுவனம் ஒன்றை அணுகினார். இதையடுத்து அந்த அமைப்பு ஜாம்நகர் மருத்துவமனை மகப்பேறு மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் நந்தினி ஆனந்த்தை அணுகியது.
அதற்கு நந்தினி ஆனந்த் கூறுகையில், இது இங்கு வழக்கமாக செய்வதுதான். ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். யார் யாருக்கு என்ன நோய் என்பதை டாக்டர்கள் எளிதில் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு ஸ்டிக்கர் போல ஒட்டி விடுகிறோம் என்றார்.
இந்த சம்பவம் குறித்து ஜாம்நகர் மாவட்ட எச்ஐவி பாதிப்புக்குள்ளானோர் சங்கம் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகார் கூறியது.
மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கும் இந்தத் தகவல் போனது.
இதுகுறித்து டாக்டர் நந்தினி ஆனந்த், டாக்டர் தீப்தி ஜோஷி, இரு நர்சுகள் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடப்பதாக தெரிகிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அன்பும், ஆதரவும் தேவை என அரசு டிவிகளில் விளம்பரம் செய்து வரும் வேலையில் ஒரு மருத்துவமனையில் டாக்டர்களே இப்படி நோயாளியை அவமானப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.












Click it and Unblock the Notifications