சட்டீஸ்கரில் நக்சலைட்கள் குண்டு வீச்சில் 11 போலீஸார் பலி
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய குண்டு வீச்சில் 11 மத்திய ரிசர்வ் போலீஸார் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் டான்டேவாடா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸார் சென்ற வாகனம், நக்சலைட்டுகளின் குண்டு வீச்சில் சிக்கியதில் இந்த கோர சம்பவம் நடந்தது.
இதுகுறித்து டிஜிபி விஸ்வ ரஞ்சன் கூறுகையில், ராய்ப்பூரிலிருந்து 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கனாரா என்ற கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது.
மத்திய போலீஸார் சென்ற வாகனத்தை நக்சலைட்டுகள் வழிமறித்தனர். பின்னர் வாகனத்தின் மீது குண்டு வீசித் தாக்கினர்.
ரோந்துப் பணிக்கான காவலர்களை டோனோகாபால் என்ற இடத்திலிருந்து அழைத்து வந்து கொண்டிருந்தபோது நக்சலைட்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர்.
இந்த வாகனம் தவிர ஒரு ஜீப்பையும் வழிமறித்து நக்சலைட்கள் தாக்கினர்.
தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் படை அங்கு விரைந்தது. அதற்குள் நக்சலைட்கள் தப்பி விட்டனர்.
காயமடைந்தவர்கள் ஜகதால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.