ரவுடிகள் தொல்லையால் பெண் தற்கொலை?
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சில சமூக விரோதிகளின் தொந்தரவே காரணம் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் கண்ணம்மாள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தீராத தலைவலியினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அவர் சில சமூக விரோதிகளின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து விசாரிக்க 10 வக்கீல்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வக்கீல்கள் அரிராகவன், மோகன்ராஜ், வேல்ராஜேஷ், திருவள்ளுவன், சேகர், பாலசுப்பிரமணியன், தாஸ், பரமசிவன், மார்க்ஸ், ராஜேஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் விசாரணைக்கு பின் இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.