மாவோயிஸ்டுகள் கைது தொடங்கியது-பெண் கைது
ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்): மாவோயிஸ்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களை தேடிப் பிடித்து கைது செய்யும் படலம் தொடங்கியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நர்சிங் ஹோமை சோதனையிட்ட போலீஸார் ஒரு பெண் மாவோ தொண்டர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்துள்னர்.
ஹசாரிபாக் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் மாவோ தீவிரவாதிகள் சிலர் சிகிச்சை பெற்று வருதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். அங்கிருந்த குந்தி தேவி என்கிற துலாதி என்ற பெண்ணைப் பிடித்தனர்.
மாவோ அமைப்பின் பெண்கள் பிரிவான நரி முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவர் குந்தி தேவி. மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்று போலீஸ் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
3 வழக்குகளில் குந்தி தேவி தேடப்பட்டு வந்தார். இதையடுத்து நக்சலைட்டுக்கு அடைக்கலம் தந்ததாக சிகிச்சை அளித்த டாக்டர் ரத்தன் லால் மஞ்சி மற்றும் சனோஜ் குமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இன்றும் பந்த்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
இந் நிலையில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்டுள்ள அதிரடி வேட்டையை கண்டித்து மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்காளம், பிகார், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் ஆகிய 5 மாநிலங்களில் அழைப்பு விடுத்த 48 மணி நேர பந்த் இன்று இரண்டாம் நாளை எட்டியது.
இதனால் இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் ரயில், பஸ் போக்குவரத்து டங்கியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் பந்த் முழுமையாக நடந்தது.
சத்தீஷ்கரில் ரயில் சேவை இன்றும் முடங்கியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் மேற்கு மிட்னாபூர், புரூலியா, பன்ஸ்குரா மாவட்டங்களில் இன்று 2வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே மவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை துணை ராணுவம் மீட்டுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.