இடம் பெயர்ந்த தமிழர்கள் புதிய முகாம்களுக்கு மாற்றம்
கொழும்பு: வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள், வேறு புதிய முகாம்களுக்கு மாற்றப்படவுள்ளனர்.
வன்னிப் பகுதியில் போரினால் இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதி சற்றும் இல்லாத கொட்டாரங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட சுகாதார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை எதுவும் இங்கு சரிவர இல்லை. இதுகுறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறை கூறி வருகின்றன.
இந்த நிலையில், வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை வேறு புதிய முகாம்களுக்குக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது உள்ள முகாம்களுக்கு அருகிலேயே இவர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து வடக்கு பிராந்திய இடம் பெயர்ந்தோருக்கான அதிகாரியான ராணுவ மேஜனர் ஜெனரல் சந்திரசிரி கூறுகையில், படிப்படியாக புதிய முகாம்களுக்கு இடம் பெயர்ந்தோர் அனுப்பப்படுவர். அங்கு ஒரு முகாமுக்கு 1000 பேர் மட்டுமே தங்க வைக்கப்படுவர்.
புதிதாக வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ள சுமதிபுரம், வீராபுரம் முகாம்களுக்கு ஏறகனவே சிலர் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். மேலும், செட்டிக்குளத்தில் உள்ள மாணிக் பார்ம் முகாமுக்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முகாமுக்கும் சிலர் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இங்கு ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி கூடாரத்தில் தங்க வைக்கப்படும். தற்போதைய முகாம்களில் உள்ள வசதிகளே இங்கும் தரப்படும்.
புதிய நலன்புரி முகாம்களில் 25 அகன்ற திரை டிவி மற்றும் சிறிய அளவிலான டிவிக்கள் பொருத்தப்படும்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித் தனியாக சமைத்துக் கொள்ளும் வசதியும் அளிக்கப்படும். சமையல் பாத்திரங்கள், ரேஷன் பொருட்களும் தரப்படும் என்றார்.
பெண் புலிகளுக்கு தனி முகாம்..
இதற்கிடையே, ராணுவத்திடம் சரணடைந்த கிட்டத்தட்ட 1000க்கும் அதிகமான பெண் விடுதலைப் புலிகளை தனியாக ஒரு முகாமில் அடைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வவுனியாவில் இந்த தனிமை முகாம் அமையவுள்ளதாம். இங்குதான் அவர்கள் மொத்தமாக அடைக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications