யாழ்-வவுனியா தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டி
யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட ஊராட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டத்தில் ஊராட்சித் தேர்தலை நடத்தவுள்ளது அரசு. இந்தத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் ராஜபக்சே கட்சி, ரனில் விக்கிரமசிங்கே கட்சி உள்ளிட்டவை போட்டியிடுகின்றன. அதேபோல பல்வேறு தமிழ்க் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் இந்த வரிசையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டமைப்பும் தற்போது சேர்ந்துள்ளது.
வியாழக்கிழமையன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர் இந்த கூட்டமைப்பின் வேட்பாளர்கள். அன்றுதான் மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும்.
டெலோ, ஈபிஆர்எல்எப், பிளாட் ஆகியவை இணைந்து ஜனநாயக தமிழ் மக்கள் முன்னணி என்ற பெயரில் தனி அணியாக போட்டியிடவுள்ளன. ஈபிடிபி தனித்துப் போட்டியிடுகிறது.
1997ம் ஆண்டு கடைசியாக இங்கு ஊராட்சித் தேர்தல் நடந்தது. அதன் பிறகு இப்போதுதான் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோத்தபயா உத்தரவு-தமிழ் எம்.பி. கைது:
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சதாசிவம் கனகரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் உத்தரவுப்படியே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வன்னி எம்.பி. சதாசிவம் கனகரத்தினம். வன்னிப் பகுதியில் இறுதியாக நடந்த யுத்தத்திற்கு முதல் நாளான மே 17ம் தேதி இலங்கை ராணுவம் கனகரத்தினத்தைக் கைது செய்தது.
அவர் எங்கிருக்கிறார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விசாரணைக்காக அவரை தாங்கள் வைத்துள்ளதாக ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்று குற்றம் சாட்டி தற்போது கனகரத்தினத்தைக் கைது செய்துள்ளது போலீஸ்.
நாடாளுமன்றக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதற்கு கனகரத்தினத்திற்கு அனுமதி தரப்படவில்லை. கோத்தபாய ராஜபக்சே உத்தரவுப்படியே அவரை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கனகரத்தினத்தை கொழும்பு கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இவரை தொடர்ந்து காவலில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர், இவரை தொடர்ந்து காவலில் வைப்பதற்கான அனுமதியை கோரினர்.
இதனையடுத்து, சதாசிவம் கனகரத்தினத்தை வருகிற 26ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது.
போரின் கடைசி நாட்களின் போது போர்க்களப் பகுதியில் இருந்தவர் என்பதால் கனகரத்தினத்திற்கு இலங்கைப் படையின் சகல விதமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் நன்கு தெரியும் என்பதால் அவரை வெளியே விடாமல் சிறையில் போட்டு வைக்க இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே அவர் மீது அவசர கால சட்டம் அவர் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications