புதிய சட்டசபையின் கார் பார்க்கிங் ஆகும் கூவம் இல்லம்
சென்னை: சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தின் கார் பார்க்கிங் கட்டுவதற்காக கூவம் இல்லம் இடிக்கப்படுகிறது.
கடந்த 1920ம் ஆண்டு இந்த இல்லம் கட்டப்பட்டது. சிவானந்தா சாலையில் (தூர்தர்ஷன் அலுவலகம் உள்ள சாலை) கூவத்தையொட்டி இந்த பெரிய பங்களா கட்டப்பட்டது. ஓமந்தூர் ராமசாமி அரசினர் தோட்டத்தின் ஒரு பகுதியில் இது அமைந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், ஆளுநர் மாளிகையாக திகழ்ந்ததாகும். ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தங்கும் இல்லமாகவும் இருந்துள்ளது.
1974ம் ஆண்டு வரை இந்த கட்டடத்தை பலரும் பயன்படுத்தி வந்தனர். அந்த ஆண்டில் இது முதல்வர் இல்லமாக மாற்றப்பட்டது. ஆனால் ஒரு முதல்வர் கூட இங்கு தங்கியதில்லை. இதனால் இதை ராசியில்லாத கட்டடம் என முத்திரை குத்தி விட்டனர். யாரும் பயன்படுத்தாமல் சும்மா கிடந்தது கூவம் இல்லம்.
சரி முதல்வர்கள்தான் பயன்படுத்தவில்லையே, சபாநாயகர்களாவது பயன்படுத்தட்டும் என்று சபாநாயகர்களுக்காக இதை ஒதுக்கினர். முதல் சபாநாயகராக எம்.ஜி.ஆர். ஆட்சியில் சபாநாயகராக இருந்த முனு ஆதி இங்கு தங்கினார். ஆனால் அவரது ராசியோ என்னவோ, அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது. இதனால் கூவம் இல்லம் உண்மையிலேயே ராசியில்லாத இல்லமாக பார்க்கப்பட்டது.
இதனால் சில காலம் யாரும் பயன்படுத்தாமல் இருந்தது கூவம் இல்லம். அரசு அதிகாரிகள் அவ்வப்போது இதை அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.
இதுதவிர முக்கிய வழக்குகளின் விசாரணைகள், விசாரணைக் கமிஷன் விசாரணைகள் இங்கு நடந்து வந்தன.
இந்த நிலையில், கூவம் இல்லம் மிகவும் பாழடைந்து விட்டதால் இதை மூடி விட்டனர். இந்த சமயத்தில், புதிய சட்டசபை வளாகத்திற்கு தேவைப்படும் கார் பார்க்கிங்குக்காக இப்போது கூவம் இல்லத்தை இடித்து வருகின்றனர்.