குழந்தை கடத்தல்-நெல்லையில் 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தல்காரர்களிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இயங்கி வரும் ஒரு காப்பத்தில் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக நெல்லை டிஐஜி கண்ணப்பன், போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் வள்ளியூர் குழந்தைகள் காப்பாகத்தின் நிர்வாகி ராஜன் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். மேலும் அந்த காப்பகத்தில் இருந்த 1 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகளை மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
50க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத காப்பகங்கள்...
இது தொடர்பாக சமூக நல அதிகாரி உமா தேவி கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தை காப்பகங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தவறு நடக்கும் அனைத்து குழந்தைகள் காப்பகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில குழந்தைகள் காப்பாக நிர்வாகிகளுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரியாமல் உள்ளது. அவர்களை போன்றவர்களுக்கு விபரம் தெரியாமல் தத்து எடுப்பவர்களுக்கும், விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications