13 வயதில் திருமணம் வேண்டாம்-கோர்ட் அறிவுரை
மதுரை: 13 வயதேயான சிறுமிக்கு இப்போது திருமணம் நடத்தக் கூடாது. அவருக்கு 18 வயதானவுடன்தான் திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறி இதுதொடர்பான வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பிரவியம்பட்டியை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், எனது அண்ணன் ரவிச்சந்திரனின் மகள் பானு (13) கருமாத்தூரில் உள்ள புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வருகிறாள்.
பானுவை மதுரை ஒத்தவீடு அருகே உள்ள கே.வடுகபட்டியை சேர்ந்த ராணுவ வீரரான 36 வயதுள்ள ஒச்சாத்தேவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார்.
ஒச்சாத்தேவரிடம் வாங்கிய கடனை நேர் செய்வதற்காக இந்தத் திருமணத்திற்கு எனது அண்ணன் முயற்சி செய்கிறார்.
சிறிய வயது பெண்ணை 36 வயதுள்ளவருக்கு திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்று பெரியவர்கள் சேர்ந்து கண்டித்தோம். ஆனால் அதை ரவிச்சந்திரன் கேட்காமல், 24ம் தேதியன்று கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்.
இது குழந்தை திருமணத் தடை சட்டத்திற்கு விரோதமானது. எனவே இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி பானுவையும், பெற்றோரையும் நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி நீதிபதி ராமநாதன் முன்னிலையி்ல நேற்று பானு, அவருடைய அப்பா, அம்மா ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது ரவிச்சந்திரனின் வக்கீல்கள் வாதிடுகையில்,
பள்ளி மாணவியான பானுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது உண்மை தான். கள்ளர் சமூகத்தைப் பொருத்தமட்டில் முறை மாப்பிள்ளைக்குத் தான் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர்.
முறை மாப்பிள்ளை மறுத்தால் தான் வேறு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பர். அந்த வகையில் ஒச்சாத் தேவர், பானுவுக்கு முறை மாப்பிள்ளை. எனவேதான் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனுதாரர் கூறுவது போன்று நாளை (இன்று) திருமணம் நடக்கவில்லை. மனுதாரருக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே உள்ள சிவில் பிரச்சினை காரணமாக அவர்களாகவே ஒரு அழைப்பிதழை அச்சிட்டு 24-ந் தேதி திருமணம் நடக்க உள்ளதாக கூறி இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்துள்ள திருமண அழைப்பிதழ் நாங்கள் அச்சிட்டது இல்லை. அதே போல மனுதாரர் கூறுவது போன்று மாப்பிள்ளைக்கு 36 வயது இல்லை. 30 வயது தான் ஆகிறது. பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்பு தான் திருமணம் நடத்தப்படும் என்றனர்.
இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு, பானுவுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்பு திருமணம் செய்து கொடுங்கள் என்று அறிவுரை கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.