'கத்திரி' போய் 'கத்தி'!-சென்னையில் அனல்!!
சென்னை: கத்திரி வெயில் எக்ஸ்டென்ஷன் ஆகியுள்ளதோ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் கடும் வெயில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
வழக்கமாக கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் இன்னும் கடுமையாக இருக்கும்.
ஆனால் அக்னி நட்சத்திரம் போன பின்னர் படிப்படியாக வெயிலின் அளவும், அனலும் குறையும்.
ஆனால் சென்னை நகரில் இது தலைகீழாக உள்ளது. மே மாதத்தில் வெயில் பெரிய அளவில் இல்லை. ஆனால் தற்போது ஜூன் மாதத்தில் கொளுத்தி எடுக்கிறது.
கத்திரி வெயில் போய் கத்தி வெயில் வந்து விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு வெயில் மிகக் கடுமையாக இருக்கிறது. கொளுத்தும் வெயிலுடன், அனல் காற்றும் வீசுவதால் மக்கள் புழுக்கத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினசரி 104 முதல் 105 டிகிரி வரையிலும் வெயில் பதிவாகி வருகிறது. மாலைக்கு மேல் லேசான காற்று வீசுவதால் சற்று நிம்மதியாக உள்ளது.
ஏன் இப்படி..
ஜூன் மாதத்தில் ஏன் இவ்வளவு அனலாக இருக்கிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வழக்கமாக கடல் காற்று 10.30 மணியளவில் வீசத் தொடங்கினால் வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பு நிலையில் இருக்கும்.
ஆனால் கடல் காற்று தாமதமாக வீசி வருவதால் வெயில் இயல்பை விட அதிகமாக உள்ளது என்றார்.
வெயில் தொடர்ந்து கடுமையாக இருப்பதால் குளிர்பானக் கடைகளில் இன்னும் கூட்டம் ஜே ஜே என்று காணப்படுகிறது.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான். குற்றாலத்தில் சுத்தமாக மழை நின்று போய் விட்டது. இதனால் அங்கும் போக முடியாத நிலை மக்களுக்கு. மாநிலம் முழுவதும் வெயில் கடுமையாகவே இருப்பதால் மக்கள் வியர்த்து விறுவிறுத்துப் போயுள்ளனர்.