ஒரிஸ்ஸாவில் ப.சி-செல்போன் கோபுரங்கள் தகர்ப்பு

மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சலைட்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் லால்கர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைப் பிடித்து வைத்துள்ள நக்சலைட்களை விரட்டி அவர்களிடமிருந்து கிராமங்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பதுங்கி கொண்டு தாக்குதல் நடத்தி வரும் நக்சலைட்களை ஒடுக்க கமாண்டோப் படைகளை ஈடுபடுத்துவது குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒரிஸ்ஸா மாநிலம் கோராபுட்டிலும் நக்சலைட் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இந்த நகருக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருகிறார். அங்கு காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால் சிதம்பரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நக்சலைட்கள் இன்று காலை முதல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பழங்குடியின மக்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். இதனால் கோராபுட் மாவட்டம் பதட்டமாக உள்ளது.
நாராயண்பட்னா என்ற இடத்தில் 3 செல்போன் கோபுரங்களை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் குண்டு வைத்து அழித்தனர். இதில் 3 செல்போன் கோபுரங்களும் தகர்ந்தன. இதனால் அந்த பகுதியில் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த பகுதியில் சாலைகளை மாவோயிஸ்டுகள் துண்டித்துள்ளனர். இதனால் நாராயண் பட்னா பகுதியில் முகாமிட்டிருந்த 400 பாதுகாப்புப் படை வீரர்கள் எங்கும் செல்ல இயலாமல் முடங்கி இருந்தனர். தற்போது செல்போன் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்த பாதுகாப்புப்படையினர் முற்றிலுமாக தகவல் தொடர்பை இழந்துள்ளனர்.
நாராயண்பட்னா பகுதியில் சாலை தடுப்புகளை அகற்ற சென்ற 9 பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த 18-ம் தேதி கண்ணி வெடியில் சிக்கி பலியானார்கள். இதையடுத்து சாலை தடுப்புகளை அகற்ற போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.
நாராயண்பட்னா முகாமில் உள்ள பாதுகாப்புப் படை வீரர்கள் நாலாபுறமும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எந்த பகுதி வழியாகவும் வெளியேற இயலாமல் முடங்கியுள்ளனர்.
அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக ஹெலிகாப்டர் மூலமாக உணவு போடப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அந்த பகுதியில் மிகவும் ஆவேச தாக்குதல்கள் நடத்தி வருவதால், அங்கு அதிரடிப்படையை அனுப்ப ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, மற்றொரு இடத்தில் அரசு அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் சூறையாடினார்கள். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.
அதேபோல இன்று காலை ரயில்வே கட்டுப்பாட்டு அறை ஒன்றும் தகர்க்கப்பட்டது.
இந்தப் பதட்டமான பின்னணியில் ப.சிதம்பரம் வருவதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications