மெக்கானிக்குடன் ஓடிய பெண்-5 வருடமாக தேடும் சிபிஐ
சென்னை: கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மெக்கானிக்குடன் ஓடிப் போன பெண்ணை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் தீயணைப்புத் துறை பணியாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகள் ஜான்சிராணி லட்சுமிபாய் (ஐந்து வருடங்களுக்கு முன்பு இவருக்கு வயது 15).
பத்தாம் வகுப்பு படித்து வந்த அவரும், கலீல் என்பவரின் மகன் அகமது பாஷா என்பவரும் காதலித்தனர்.
பாஷா ஒரு மெக்கானிக் ஆவார். பள்ளி மாணவியான லட்சுமி பாய்க்கும், மெக்கானிக் பாஷாவுக்கும் இடையே காதல் தீவிரமானது. ஆனால் மதத்தைக் காரணம் காட்டியும், பாஷாவின் தொழிலைக் காரணம் காட்டியும் லட்சுமிபாயின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று பரீட்சைக்காக பள்ளி சென்ற லட்சுமி பாய், பள்ளிக்குப் போவது போல போக்கு காட்டி விட்டு காதலர் பாஷாவுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டார்.
இதுகுறித்து விழுப்புரம் போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் இருவரும் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்துத் தெரியவில்லை.
பின்னர் வழக்கு சிபிசிஐடிக்குப் போனது. அதிலும் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வீரமுத்து. அங்கு விசாரணைக்குப் பின்னர் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணையில் புதுச்சேரிக்கு காதலர்கள் இருவரும் தப்பிச் சென்றது மட்டும் தெரிய வந்தது. ஆனால் புதுச்சேரியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
காணாமல் போய் 5 வருடங்களாகியும் இதுவரை பாஷா, லட்சுமி பாய் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் எனவும் சிபிஐ அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications