50% அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே புதிய சம்பளம்?
சென்னை: 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில் புதிய சம்பள விகிதத்தை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் 50 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஜூன் மாதத்திற்கான புதிய சம்பளம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி விட்டது. இந்தப் பரிந்துரைகள் குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்ட தமிழக அரசுக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாக அறிவித்த அரசு, ஜூன் மாதம் முதல் புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்த நிலையில் புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய ஊதிய விகிதத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும்
பணி அந்தந்த துறை வாரியாக நடந்தது. தேர்வு நிலை, சிறப்பு நிலையில் ஏற்பட்டு இருக்கும் சந்தேகங்கள், ஊதிய முரண் பாடு போன்றவற்றால் புதிய ஊதியத்தை இந்த மாதம் நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 50 சதவிகித அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதி புதிய சம்பளம் கிடைக்கும். மீதமுள்ளவர்களுக்கு அடுத்த ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்படும். துணை சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
50 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான தொகையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோ. சூரியமூர்த்தி கூறுகையில், ஊதிய முரண்பாட்டால் 50 சதவிகித பேருக்கு புதிய சம்பளம் அடுத்த மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக எங்கள் சங்கம் எந்த போராட்டத்திலும் பங்கேற்காது.
முதல்வர் கருணாநிதி அரசு ஊழியர்களுக்கு கேட்காமலே சலுகைகளை வழங்கி வருகிறார். 2006-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இப்போது ஊதிய உயர்வு அளித்துள்ளார். அவருக்கு
நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் அடைகிறார்கள்.
ஊதிய உயர்வு குறைபாடு சம்பந்தமாக என்.ஜி.ஓ. சங்கம் சார்பாக கடந்த வாரம் நிதித்துறை செயலாளரை சந்தித்து பேசினோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நிவர்த்தி செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications