என்எல்சி பங்குகள் விற்பனை-வைகோ எதிர்ப்பு
சென்னை: நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின் நிலையத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் மின் தேவைக்கு இன்றியமையாததாக விளங்கும் என்.எல்.சி. நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் தீர்மானித்துள்ள காங்கிரஸ் அரசு அதற்கு முதல்படியாக 10 சதவீத பங்குகளை விற்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும்,
நவரத்னா தகுதிபெற்ற பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி. வளர்ச்சி பெறவும், மத்திய அரசு இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் விற்பனை முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
மதிமுக தொண்டர்களுக்கு நிபந்தனை ஜாமீன்:
கோவையில் கடந்த மாதம் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை சப்ளை செய்வதற்காக ராணுவ வாகனங்கள் செல்வதாகக் கூறி அதை மதிமுக, பெரியார் திக, மக்கள் குடியுரிமை கழகத்தினர் தாக்கினர்.
இது தொடர்பாக மதிமுகவை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பேர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி 10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தினமும் 5 மணி நேரம் முதியோர் இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
இந்த வழக்கில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கட்சி தலைமைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மதிமுக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தமிழ் மறவன் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், எங்கள் கட்சி தொண்டர்கள் இனி தவறு செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது
சிபிஎம் போராட்டம்:
இந் நிலையில் என்எல்சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர கமிட்டி சார்பில் நெய்வேலி காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நெய்வேலி நகர செயலாளர் திருஅரசு தலைமை தாங்கினார்.












Click it and Unblock the Notifications