டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2,505 கோடி நஷ்டம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் நிறுவனங்களை கையகப்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த நிறுவனங்களை வாங்கிய முதல் ஆறுமாதங்கள் லாபம் கிடைத்தாலும், அடுத்த வந்த நாட்கள் பெரும் சோதனையாக மாறிவிட்டது டாடாவுக்கு.
கடந்த எட்டு ஆண்டுகளில் டாடா மோட்டார்ஸ் (ஜாகுவார் லாண்ட் ரோவரை உள்ளடக்கிய டாடா மோட்டார்ஸ் குழுமம்)சந்தித்துள்ள முதல் நஷ்டம் இதுதான்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் துணைத் தலைவர் ரவி காந்த் கூறுகையில், "உலகில் நஷ்டமே காணாத நிறுவனங்கள் என்று சொல்லப்பட்டவை கூட, இன்று நஷ்டத்தில் தத்தளிக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவில் எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட பொருளாதார மந்தமே இந்த நஷ்டத்துக்குக் காரணம்" என்றார்.
லாண்ட் ரோவர் நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனை செய்ததைவிட 40 சதவிகிதம் குறைவான வாகனங்களையே இந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது. லாண்ட் ரோவர் விற்பனையில் 47000 வாகனங்கள் குறைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸின் ரஷ்ய மற்றும் சீனப் பிரிவுகள் தவிர மற்ற நாடுகளின் கிளைகளில் கணிசமான விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
டாடாவின் கொரியப் பிரிவான டாடா தேவூ மோட்டார்ஸின் விற்பனையும் கணிசமாகக் குறைந்துவிட்டது.
அடுத்து வரும் நாட்களில் சந்தை நிலவரத்தைப் பொறுத்தே டாடா மோட்டார்ஸ் குழுமத்தில் பணியாளர் குறைப்பு, செலவுக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் ரவி காந்த்.












Click it and Unblock the Notifications