லஞ்ச ஒழிப்பு-மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண்!
மதுரை: மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு அலுவலகங்களில், சி.பி.ஐ. அதிகாரிகளின் பெயர் மற்றும் போன் எண்ணுடன் பெயர் பலகை அமைக்க அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க மத்திய அரசுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் பொது மக்கள் நலன் கருதியும், அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடை செய்யும் நோக்கத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை, பாதிக்கப்பட்டவர், சிபிஐக்கு தெரிவிக்கும் வகையில்வசதியாக ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலும், சி.பி.ஐ எஸ்.பி. மற்றும் அலுவலக போன் எண்ணுடன் பெயர் பலகை அமைக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் விவரம் குறி்த்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள 044- 2825 5899 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் 94440 49224 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதே போல், மாநில அரசு அலுவலகங்களிலும், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பெயர், போன் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு, போர்டு வைக்க தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இத்த உத்தரவை பல அரசு அதிகாரிகள் குப்பையில் வீசி விட்டு பலர் அரசு அலுவலகங்களில் வெளிப்படையாகவே லஞ்சம் வாங்குகின்றனர்.
தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் விவரத்தை சென்னையில் செயல்படும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகமான 044-2461 5929, 2461 5949, 2461 5989 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.