புறநகர்களுக்கு அதிக பஸ்-வருவாயை பெருக்க திட்டம்
சென்னை: சென்னை நகருக்குள் கூட்டம் குறைவாக இருக்கும் நேரங்களில், புறநகர்ப் பகுதிகளுக்கு அதிக அளவிலான பஸ்களை விட்டு வருவாயைப் பெருக்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை நகரம் நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருகிறது. மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. மாநகரத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஈடாக, புறநகர்ப் பகுதிகளில் மக்கள் கூட்டம் குவிந்து கிடக்கிறது.
ஆனால் சென்னை நகருக்குள் ஓடும் பஸ்களைக் காட்டிலும், வெளியில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்குள் பஸ்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3000 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 50 லட்சம் பயணிகள் மாநகர பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த பஸ்கள் மாற்றப்பட்டு புதிய டீலக்ஸ் பஸ்கள் விடப்பட்டுள்ளன.
குளிர்சாதன வசதியுள்ள பஸ்களும் முக்கிய வழித் தடங்களில் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி, மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு செல்லும் காலை வேளையிலும், பணி முடிந்து திரும்பும் மாலை நேரத்திலும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
பீக் அவர்ஸ் எனப்படும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பஸ்களில் கூட்ட நெரிசல் உள்ளது. மற்ற நேரங்களில் பஸ்கள் காலியாகவே கிடக்கின்றன.
குறிப்பாக மதிய நேரத்தில் பெரும்பாலான பஸ்கள் பயணிகள் இல்லாமல் காலியாக ஓடுகின்றன.
இதனால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது இதை சரிகட்ட மாநகர பஸ்களை கூட்டம் இல்லாத நேரத்தில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கி வருவாயை பெருக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது. கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறுகையில், சென்னை மாநகர மக்கள் தொகையை கணக்கிட்டால் பஸ் வசதியை மேலும் அதிகப்படுத்த வேண்டும். தற்போது 3000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க கோரிக்கை வந்துள்ளன.
பட்ஜெட்டில் அறிவித்தபடி மேலும் 1000 பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வாங்கப்பட உள்ளன.
புதிய பஸ்கள் வந்தாலும் இப்போது உள்ள நிலையில் காலை, மாலை நேரம் தவிர மற்ற நேரத்தில் பஸ்கள் பாதி காலியாக செல்கின்றன. இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
அதனால் கூட்டம் இல்லாமல் ஓடும் நேரத்தில் பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு திருப்பி விட திட்டமிட்டு உள்ளோம்.
சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மாநகர பஸ்களை இயக்குவதன் மூலம் பொது மக்களுக்கு தொடர்ச்சியாக பஸ் போக்குவரத்து கிடைக்கும் இதன் மூலம் ஒரு பஸ் ஒவ்வொரு 15 நிமிடத்திலும் எல்லா வழித்தடத்திலும் செல்லும். இது பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
15 நிமிடத்துக்கு ஒரு பஸ் விதம் தொடர்ச்சியாக வரும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்படும். தேவையான கூடுதல் பஸ் வசதி வழங்கப்படும்.
குறைவாக பயணிகளுடன் இயக்கப்படும் பஸ்களை புறநகர் பகுதிக்கு திருப்பிவிட்டால் சென்னை நகருக்கு பொருட்கள் வாங்கவும், மற்ற பணிகளுக்கு வரவும் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் மாநகர போக்குவரத்து கழகம் பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலமும் பஸ் நிறுத்தங்களில் விளம்பரம் செய்வதன் மூலமும் அதிக அளவில் வருவாய் ஈட்டி வருகிறது.
ஏ.சி. பஸ்களில் செய்யப்படும் விளம்பரத்தினால் வருவாய் கிடைக்கிறது. விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருவாய்தான் பெரும்பங்களிப்பாக உள்ளது என்றார்.
மாநகர பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பால்ராஜ்.