சட்டசபையில் அதிமுக-பாமக கூட்டாக அமளி!
சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:
காங்கிரஸ் உறுப்பினர் யசோதா: மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு செய்த நன்மைகளின் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி அடைந்தோம். இந்த வெற்றியை தோற்றவர்கள் விமர்சனம் செய்வதையும், கவைக்கு உதவாத காரணங்களை சொல்லி அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதையும், தினசரி அறிக்கை விடுவதையும் மக்கள் ஏற்கவில்லை. மக்கள் தீர்ப்பை கொச்சைப்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது குற்றம் சொல்கிறார்கள் என்றார்.
இதற்கு பாமக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தனர்
அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன்: உறுப்பினர் யசோதா யாரையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டு சொல்லவில்லை. எனவே இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து ஏதோ கூற அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை அமைதியாக நடத்த உதவ வேண்டும் என்றார்.
ஆனால் அவர் சொன்னதைக் கேட்காமல் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
சபாநாயகர்: அனைவரும் ஒரே நேரத்தில் பேசுவதற்கு பதிலாக யாராவது ஒருவர் கருத்தை கூறலாம் என்றார்.
அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம்: அவை முன்னவர் அன்பழகன் நேரத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார். முன்பு பொதுப்பணித் துறை அமைச்சர் எங்கள் கட்சியை குறிப்பிட்டு சொன்னது அவைக் குறிப்பில் இருக்கிறது என்றார்.
இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து துரைமுருகன் அன்று சொன்னதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றனர். இதற்கு சபாநாயகர் ஒப்புக் கொள்ளவில்லை.
அப்போது அவைக்குள் வந்த அமைச்சர் துரைமுருகன்: நான் அதிமுகவை குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. இருநதாலும் பன்னீர்செல்வம் என்னை நோக்கியும், நான் அவரை நோக்கியும் கூறிய கருத்துக்கள் அன்றே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டன என்றார்.
ஆனாலும் அதிமுக, பாமக உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டதால் அவையில் மீண்டும் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): இவ்வாறு நடந்து கொண்டால் வெளியிலிருந்து சட்டசபை நடவடிக்கைகளை காண வந்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள். யாராவது ஒருவர் விளக்கம் கூறலாமே தவிர அனைவரும் எழுந்து நின்று பேசுவது சரியல்ல. எனவே ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி: நடந்து முடிந்த தேர்தல் பற்றி யசோதா சொன்னார். அவர் யாரையும் குறிப்பிடாமல்தான் கூறினார். இப்போதும் நானும் யாரையும் குறிப்பிடாமல் கூறுகிறேன். நடந்து முடிந்த தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது; மோசடி நடந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தோல்வி ஜனநாயகத்துக்கு கிடைத்த தோல்வியாகும்.
முதல்வர் கருணாநிதி: ஒரு வரியில் கருத்து கூறலாம் என்று சொன்னால் பெரிய உரையே நிகழ்த்துவதா?.
காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: இந்தக் கூட்டத் தொடரில் முதன் முதலாக எங்கள் கட்சி உறுப்பினர் யசோதா பேசுகிறார். அதனால் நடந்து முடிந்த தேர்தல் பற்றி குறிப்பிட்டார். 27 தொகுதிகளில் வெற்றி பெற்ற எங்களது தேர்தல் மோசடி என்றால் 12 இடங்களில் வென்ற எதிர்க்கட்சி கூட்டணி வெற்றியை எப்படி சொல்வது? என்று கேட்டார்.
இதற்கு பதிலளிக்க ஜி.கே.மணி எழுந்து நின்றார். ஆனால், நீங்கள் ஏற்கனவே பேசி விட்டீர்கள் என்று கூறி அவருக்கு வாய்ப்பு மறுத்தார்.
ஆனால், தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் அனைவரும் நின்று கொண்டே கூச்சலிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர்.
பாமக உறுப்பினர்கள் உட்காரவிட்டால் வெளியேற்ற நேரிடும் என சபாநாயகர் எச்சரித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ்: இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய அன்றே தேர்தல் முறைகேடு என்று சொல்லி வெளிநடப்பில் ஈடுபட்டது யார்? அதற்கு எங்கள் கட்சி பதில் கூற வேண்டாமா? பதில் கூறினால் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். அதுவும் யாரையும் குறிப்பிட்டு யசோதா கூறவில்லை. நீங்களாக ஏன் எழுந்து அதை மறுக்கிறீர்கள்? இது எங்க அப்பன் புதிருக்குள் இல்லை என்பதை போல உள்ளது.
அமைச்சர் துரைமுருகன்: 2001ம் ஆண்டு நாங்கள் தோல்வி அடைந்து இந்த மன்றத்திற்கு வந்தபோது அப்போதைய முதல்வர் ''நீங்கள் மண்ணைக் கவ்வி விட்டீர்கள்; மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டார்கள், உங்களுக்கு மரண அடி கொடுத்து விட்டார்கள்'' என்று ஒரு மணி நேரம் எங்களை காய்ச்சி எடுத்தார். அப்போது இதே பன்னீர்செல்வம் அவருக்கு பக்கத்தில்தானே உட்கார்ந்திருந்தார்.
ஆனால், யசோதா அப்படி குறிப்பிட்டு குற்றம் சொல்லாமல், ஜாடை மாடையாக சொன்னதையே உங்களால் பொறுக்க முடியவில்லையே?.
அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன்: அன்று துரைமுருகன் சொன்னது அவைக் குறிப்பில் எப்படி இருக்கலாம்?
முதல்வர் கருணாநிதி: அன்று அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதை அதிமுக கொறடா தேவையில்லாமல் இன்று பேசி அவையில் பதிவு செய்துள்ளார். எனவே அவர் கூறியதையும், நான் இந்த விஷயத்தில் கூறியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கலாம்.
இதையடுத்து அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. பின்னர் யசோதா தொடர்ந்து பேசினார்.