அதிமுக-மதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ''காப்பாற்று காப்பாற்று'' என்று கோஷமிட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி குறுக்கீட்டு, சட்டமன்றத்தில் கோஷமிடுவது அவையின் கண்ணியத்திற்கு எதிரானது. கோஷமிடும் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.
இதையடுத்து சபாநாயகர் அவர்களை கோஷமிடக்கூடாது என்று எச்சரித்தார். ஆனாலும அதிமுகவினர் தொடர்ந்து கோஷமிட்டப்படி கூச்சல் செய்தனர்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்து எஸ்.வி. சேகர் தவிர அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூண்டோடு வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
அவர்களுக்கு ஆதரவாக கோஷமிட்ட மதிமுக உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அவைக்கு வெளியே அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் 50,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே இலங்கை அரசை, ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரில் சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் அனுமதி மறுத்து விட்டார்.
அதுபற்றி மீண்டும் அனுமதி கேட்டு பிரச்சனை எழுப்பினோம். சபாநாயகர் முடிவு எடுப்பதற்குள் முதல்வர் எங்களை வெளியேற்ற சொல்லி விட்டார்.அதன் பிறகு சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார் என்றார்.
கெட்ட எண்ணம்.. துரைமுருகன்:
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
சட்டசபைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அதிமுகவினரும், அவர்களது கூட்டணிக் கட்சியினரும் வேண்டும் என்றே தேவையில்லாத பிரச்சனையை கிளப்புகிறார்கள். முறையாக அனுமதி கேட்டால் அதுபற்றி விவாதிக்க அனுமதி வழங்கப்படும்.
ஆனால் அவைக்குள் ஒன்றை செய்து விட்டு வெளியே வந்து அதை திரித்து கூறுகிறார்கள். மக்களும் அதை நம்பும் நிலை ஏற்படுகிறது. எனவே அவர்கள் வெளியே வந்து தவறான கருத்துக்களை சொன்னால் நாங்களும் தினமும் வந்து விளக்கம் கொடுப்போம்.
அதிமுகவுக்கும் அவர்களது தோழமைக் கட்சிகளுக்கும் ஒரே திட்டம் ஆட்சியின் பெயரைக் கெடுப்பது தான். மற்றபடி மக்கள் பிரச்சனையைப் பேசுவோம், அதைத் தீர்த்து வைப்போம் என்ற எண்ணமே கிடையாது. எங்களது பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications