குறுக்கே வந்த நாய்-கோவிலில் பஸ் மோதி 4 பேர் பலி
விழுப்புரம்: பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் குறுக்கே வந்த நாய் மீது மோதமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பியதில் கோயில் மீது பஸ் மோதி நான்கு பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாய்களால் மனிதர்களுக்கு பல நன்மை உண்டு என்றாலும் சில சிக்கல்களும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சாலைகளில் எதை பற்றியும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் ஓடி விபத்துகளை ஏற்படுத்துவது தான். இது போன்ற சம்பவங்களை அறியாத, கேள்விப்படாத வாகன ஓட்டிகள் யாரும் இருக்க முடியாது.
வேகமாக வரும் வாகனங்களுக்கு குறுக்கே வந்து, டிரைவரின் கவனத்தை திசை திருப்பி பெரிய விபத்தில் சிக்க வைத்துவிடும்.
இது போன்ற ஒரு சம்பவம் தான் நேற்று விழுப்புரம் அருகே நடந்துள்ளது. பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விழுப்புரம் கிழக்கு புதுவை சாலையில் உள்ள சவிதா சினிமா தியேட்டர் அருகில் வந்த போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதையடுத்து டிரைவர் பேருந்தை வேகமாக திருப்பினார். அப்போது அந்த பேருந்து அருகில் இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோயில் மீது மோதியது.
இதில், பஸ்சில் பயணம் செய்த தர்மபுரி மாவட்டம் கொள்ளுப் பட்டினத்தைச் சேர்ந்த முத்துவேடி (50), காரைக்குடி செக்கிடிகேட்டில் வசிக்கும் சந்தியா (30), காரைக்குடியைச் சேர்ந்த ராஜாராம் மகன் காமராஜ் (45), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கண்ணன் (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து புதுவையைச் சேர்ந்த பஸ் டிரைவர் கபிலன் (42) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசு, உரிமம் பெறாத நாய்களுக்கு தனி இடம் அமைத்து இவைகளை பிடித்து அங்கு கொண்டு போய் அடைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.