சென்னையில் 30 மாநகராட்சி பள்ளிகளுக்கு பூட்டு?
சென்னை: சென்னையில் 30 மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மேயர் இதை மறுத்துள்ளார். அந்த பள்ளிகள் மூடப்படவில்லை. அவை மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவி்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை நடந்தது. அப்போது பாமக உறுப்பினர் ஜெயராமன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அதன் மீது பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வியாபார நிறுவனங்கள் ஆகிவி்ட்டன. ஆரம்ப கல்வியில் அதிக ஈடுபாடு வேண்டும் என கல்வியாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது சென்னையில் 30 மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
இது கண்டிக்கத்தக்கது. ஏழை குழந்தைகள் மாநகராட்சி பள்ளிகளை தான் அதிகம் நம்பியிருக்கின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் துவக்கப்பட்டு இலவச கல்வி அளிக்கப்பட்டது. எனவே மூடிய 30 பள்ளிகளையும் உடனடியாக திறக்க வேண்டும்.
சென்னையில் அசோக் நகர் மற்றும் கோடம்பாக்கம் மேல்நிலை பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவை மாநகராட்சி பள்ளிகளாக இருந்த போதிலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்க்க போட்டி போடுகின்றனர். இந்த பள்ளிகளை பின்பற்றி மற்ற பள்ளிகளும் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி பேசுகையில், மூடப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததால் அருகிலிருந்த பள்ளிகளுடன் இணைக்கப்பட்டதாக சொல்கின்றனர்.
ஆனால் மண்டலம் 4ல் உள்ள மாநகராட்சி பள்ளியில் 261 மாணவர்கள் உள்ளனர். அதை ஏன் மூடினார்கள்? சில இடங்களில் தவறு நடந்துள்ளது. அதிக மாணவர்கள் உள்ள பள்ளியை மூடியது தவறு. அந்த பள்ளிகளை திறக்க வேண்டும் என்றார்.
இவர்களின் குற்றச்சாட்டுக்கு மேயர் பதிலளிக்கையில்
30 மாநகராட்சி பள்ளிகள் மூடப்படவில்லை. அவை மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அந்த பள்ளிகள் உடனடியாக திறக்கப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில மோகம் காரணமாக மாநகராட்சி பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர். இந்த குறைகளை போக்க பல நல்ல திட்டங்களை தீட்டியுள்ளோம்.
இலவச சீருடை, பேக், காலணி, நோட்டுப் புத்தகம், மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் போன்றவைகளை செய்து வருகிறோம். இந்த ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் 81 சதவீதமும், 10ம் வகுப்பில் 83 சதவீதமும் மாநகராட்சி பள்ளிகள் சாதனை படைத்துள்ளது.
ஒருசில துவக்கப்பள்ளிகளை நடு நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கை உயரும். அதன் மூலம் அந்தப் பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயரும். அதனால் இந்தப் பள்ளிகளை ஒன்று சேர்த்தோம். மூடப்பட்ட 30 பள்ளிகளில் 50 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகள் அதே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள துவக்க பள்ளியில் 8 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்காக எப்படி ஒரு தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் உள்பட 8 பேரை வேலைக்கு வைக்க முடியும். இது போன்ற நிலையில் அந்த பள்ளிகளை அதே வளாகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியுடன் இணைத்துள்ளோம் என்றார்.
அது மூடப்பட்டுள்ளதோ அல்லது இணைக்கப்பட்டு்ள்ளதோ... ஆனால், சென்னையில் 30 பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications