வெளியேறும் யு.எஸ். படைகள் - விழாக் கோலம் பூண்டது ஈராக் - பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறி அமெரிக்கா, அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. பின்னர் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிடப்பட்டார்.
ஈராக்கில் புதிய அரசை நிறுவிய போதிலும் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறாமல் தொடர்ந்து அங்கேயே நிறுத்தி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு தினமும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈராக்கியர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி இன்று முதல் அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேற துவங்கியுள்ளது.
படை வாபஸ் வரும் 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முழுமை பெறுகிறது.
இன்று முதல் ஈராக்கின் நகர் பகுதிக்குள் அமெரிக்க ராணுவத்தினர் யாரும் இருக்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நகருக்கு வெளியில் இருக்கும் முகாம்களில் மட்டுமே தங்கியிருப்பார்கள். ஈராக்கியர்கள் உதவிக்கு அழைத்தால் மட்டுமே வருவார்கள் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் நிகழச்சியை ஈராக் உற்சாகமாக கொண்டாடியது. ஈராக் டிவிக்கள் புத்தாண்டு ஒளிப்பரப்பு போல் டிவியில் நள்ளிரவு 12 மணிக்கு அவர்கள் வெளியேறுவதை கவுன்ட்-டவுன் செய்து ஒளிபரப்பின.
நேரம் இரவு 12 மணியை தொட்டவுடன் அமெரிக்கா ராணுவம், பாக்தாத் நகரத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஈராக்கிடம் கொடுத்தது.
இதையடுத்து ஈராக்கியர்கள் வாண வேடிக்கையில் மூழ்கி திளைத்தனர். பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர். தெருக்களில் நடனமாடி களித்தனர்.
ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிகி கூறுகையில், இன்றைய தினம் ஈராக்கில் பொது விடுமுறை. அமெரிக்க படைகள் வெளியேறி விட்டன. நாட்டின் இறையாண்மை மீட்கப்ப்டடது. இன்றைய தினத்தை தேசிய இறையாண்மை தினமாக கொண்டாடுவோம் என்றார் அவர்.